காலநிலை மாற்றத்தால் சவாலுக்குட்பட்டுள்ள உணவு உற்பத்தி தேசிய செயற்திட்டத்திற்கு புத்துயிரூட்டி தொடர்ச்சியாக முன்னெடுத்தல் மற்றும் நாட்டில் விவசாய எழுச்சியை ஏற்படுத்தும் நோக்குடன் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் வழிகாட்டலில் அமுல்படுத்தப்படும் தேசிய உணவு உற்பத்திப் புரட்சி வாரத்தின் அரசாங்க ஊழியர் தினம் இன்று (11) இடம்பெறுகிறது.
இது தொடர்பாக ஊடகங்களுக்குத் தெளிவுபடுத்தும் ஊடக சந்திப்பு கொழும்பு ஜனாதிபதி மாவத்தையிலுள்ள செமா கட்டிடத்தில் அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் சிரேஷ்ட அதிகாரிகள் தலைமையில் நேற்று (10) நடைபெற்றது.
உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் நீல் த சில்வா, பொதுநிருவாக முகாமைத்துவ அமைச்சின் செயலாளர் ஏ ஜே ரத்னசிறி, மாகாண சபைகள் உள்ளுராட்சி அமைச்சின் மேலதிக செயலாளர் (அபிவிருத்தி) சுஜான் நாணயக்கார ஆகியோர் அரசாங்க ஊழியர் தினத்தில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள நிகழ்ச்சித் திட்டங்கள் குறித்து விளக்கமளித்தனர்.