முன்னாள் ஜனாதிபதியும் தேசிய ஒருமைப்பாட்டுக்கும் நல்லிணக்கத்திற்குமான அலுவலகத்தின் தலைவியுமான சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க இம்மாதம் 21ஆம் திகதி மட்டக்களப்புக்கு விஜயம் செய்யவுள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் தேசிய ஒருமைப்பாட்டுக்கும் நல்லிணக்கத்துக்குமான அலுவலகத்தினால் மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட, சமூக, பொருளாதார மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் கடந்த வருடம் முதல் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தி திட்டங்களைப் பார்வையிடவுள்ள அவர், வாழ்வாதார உதவி வழங்கல் மற்றும் உதவி பெற்ற மக்களுடன் கலந்துரையாடல்களையும் மேற்கொள்ளவுள்ளார்.
மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகப்பிரிவிலுள்ள குளுவினமடு கிராமத்தில் நடைபெறும் பிரதான நிகழ்வில் கலந்து கொள்ளும் முன்னாள் ஜனாதிபதி செங்கல் உற்பத்தித் தொழிலாளர்களுக்கான வாழ்வாதார தொழில் உபகரணங்களையும் ஆடு வளர்ப்புக்கு தெரிவுசெய்யப்பட்ட பயனபளிகளுக்கு ஆடுகளையும் வழங்குவார்.
அடுத்ததாக தேசிய ஒருமைப்பாட்டுக்கும் நல்லிணக்கத்திற்குமான அலுவலகத்தின் நிதியொதுக்கீட்டில் புனரமைக்கப்பட்ட மண்முனை தென்மேற்கு பிரதேசத்துக்குட்பட்ட நீறுபோட்டசேனை குளத்தினை விவசாய அமைப்புகளிடம் விவசாய நடவடிக்கைகளுக்காக கையளிக்கவுள்ளதுடன் மாவடிமுன்மாரி பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள மகப்பேற்று நிலையத்தினையும் திறந்து வைப்பார்.