பிரித்தானிய ஆட்சியின் போது 1818 - 1848 வரையான காலப்பகுதியில் தேசத்துரோகிகளாக பெயரிடப்பட்ட
தலைவர்களை தேசிய வீரர்களாக பிரகடனப்படுத்துவது தொடர்பில் ஆராய்வதற்காக ஐந்து பேர் கொண்ட குழுவை அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ நியமித்துள்ளார் என்று நீதி மற்றும் பௌத்த விவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஓய்வு பெற்ற பேராசிரியர் மாலனி அந்தகம இக்குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். பேராசிரியர் கே.என். ஓ தர்மதாச, களனி பல்லைக்கழகத்தின் தொல்லியல் துறை பிரிவின் சிரேஷ்ட பேராசிரியர் அநுர மனதுங்க, அரச சுவடிகள் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் கலாநிதி கே.டீ.விமலரத்ன, மற்றும் கலாநிதி பிரதீப் வீரசிங்க ஆகியோர் இக்குழுவின் ஏனைய உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஆங்கிலேயருக்கு எதிராக 1818ம் ஆண்டில் மலைநாட்டு சுதந்திர போராட்டம் மற்றும் 1848 இல் ஊவா வெல்லஸ்ஸ சுதந்திர போராட்டத்தில் தலைமைத்துவம் வகித்த வீரர்கள் தோல்வியடைந்த பின்னர் தேசத்துரோகிகளாக ஆங்கிலேயரால் அறிவிக்கப்பட்டதுடன் அவர்களுக்கும் அவர்களுடைய குடும்பங்களுக்கும் ஏற்படுத்திய பல்வேறு கொடுமைகள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஆராய்ந்து தேசத் துரோகிகளாக அறிவிக்கப்பட்டு ஆங்கிலேயரால் வௌியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை ரத்து செய்து அவர்களை சுதந்திர போராட்ட வீரர்களாக அறிவிப்பதற்கான ஆலோசனைகளை வழங்குவதே இக்குழுவின் பொறுப்பாகும்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆலோசனைக்கமைய அமைச்சர் நியமித்துள்ள இக்குழு கடந்த 1818ம் ஆண்டு மத்திய மலைநாட்டின் முதலாவது சுதந்திர போராட்ட வீரர்களான வீர கெப்பட்டிபொல நிலமே உட்பட 10 வீரர்களை ராஜதுரோகிகளாக அறிவித்து 1818 ஜனவரி மாதம் 30ம் திகதி ரொபட் பிரௌரிக் ஆளுநரால் வௌியிடப்பட்ட 851வது இலக்க ராஜதுரோகி வர்த்தமானி அறிவித்தல் ரத்து செய்யப்பட்டது.
1818 மற்றும் 1848 ஆகிய ஆண்டுக்காலப்பகுதியில் சுதந்திர போராட்டத்திற்காக போராடிய தேசிய வீரர்களின் குடும்பங்கள் தொடர்பான தகவல்களை ஆய்வு செய்தவர்கள் மற்றும் அமைப்புகள் இருப்பின் அத்தகவல்களை இக்குழு ஆராய்வதற்காக 20.02.2017ம் தினத்திற்கு முன்பதாக செயலாளர், நீதியமைச்சு. உச்சநீதிமன்ற கட்டிடத்தொகுதி, கொழும்பு 12 என்ற முகவரிக்கு அல்லது This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it. முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு அமைச்சு பொதுமக்களிடம் கோரியுள்ளது.