வெளிவிவகார அமைச்சின் இலத்திரனியல் தொழில் நுட்பத்துடன் கூடிய புதிய கொன்சியூலர் பிரிவு நேற்று (06) உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.
சேவைகளை துரிதப்படுத்தும் நோக்கில் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய வகையில் இப்புதிய பிரிவு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் சான்றிதழ்களை அத்தாட்சிப்படுத்துவதற்கு இரு நாட்கள் முதல் 6 மணித்தியாலங்கள் வரை தேவைப்பட்ட போதிலும் இனி 15 நிமிடங்களில் அச்சேவை பூர்த்தி செய்யப்படும் என்று வெளிவிவகார அமைச்சு தெரிவித்தது.
தற்போது உலக வர்த்த கட்டிடத்திற்கு முன்பாக உள்ள செலின்கோ கட்டிடத்தின் இரண்டாம் மாடியில் நேற்று முதல் இயங்குகிறது. நவீன இலத்திரனியல் வசதிகளுடன் கூடிய இப்புதிய அலுவலகத்தை வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர திறந்து வைத்தார். இதன் போது முதலாவது சான்றிதழை பிரதி வெளிவிகார அமைச்சர் ஹர்ச டி செல்வா உறுதிப்படுத்தி எடுத்தார்.
கொன்சியூலர் பிரிவினூடாக நாளாந்தம் 500 முதல் 600 பேர்கள் வரை இப்பிரிவுக்கு வருவதோடு 1200 முதல் 1500 ஆவணங்கள் வரை பரீட்சிக்கப்படுகிறது. நவீன வசதியுடன் மிக குறைந்த நேரத்தில் கூடிய சேவையை இனிவரும் காலங்களில் வழங்க முடியும் என்று வெளிவிவகார அமைச்சு இதன் போது சுட்டிக்காட்டியது.
எதிர்காலத்தில் ஏனைய பிரிவுகளையும் இலத்திரனியல் தொழில் நுட்பத்திற்கு மாற்ற இருப்பதாக அமைச்சர் குறிப்பிட்டார்.இதனுடாக மக்களுக்கு விரைவாக சிறந்த சேவையை வழங்க எதிர்பார்ப்பதாக வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர இதன் போது சுட்டிக்காட்டினார்.
புதிய இடத்தில் நவீன வசதிகளுடன் புதிய கொன்சியூலர் பிரிவை மாற்ற ஒருவருட காலம் பிடித்தது. இதற்கு பல்வேறு இடையூறுகள் ஏற்பட்டன.நம்பகத்தன்மையுடன் சிறந்த சேவையை வழங்கும் வகையில் நவீன வசதிகளுடன் இப்பிரிவு அமைக்கப்பட்டுள்ளது என பிரதியமைச்சர் ஹர்ஷ டி சில்வா சுட்டிக்காட்டினார்.