விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி மேம்படுத்தல் தேசிய வாரத்தின் ஆரம்ப நிகழ்வு இன்று (06) முற்பகல்ஆரம்ப
நிகழ்வு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் முற்பகல் ஜனாதிபதி செயலக வளாகத்தில் ஆரம்பமாகியது. அதன் பின்னர் நடைபெற்ற நடைபவனியிலும் ஜனாதிபதி அவர்கள் கலந்துகொண்டார்.
நாட்டில் வேகமாக அதிகரித்துவரும் தொற்றா நோய்களைக் கட்டுப்படுத்தும் நோக்குடன் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் ஆலோசனைக்கமைய விளையாட்டுத்துறை அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இவ்வாரமானது எதிர்வரும் 12ஆம் திகதிவரை நாடு முழுவதும் அமுல்படுத்தப்படுகிறது.
‘நலம், மகிழ்ச்சி, வெற்றிக்காக விளையாட்டு’ என்பது இம்முறை விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி மேம்படுத்தல் தேசிய வாரத்தின் தொனிப்பொருளாகும். இவ்வாரத்தில் இவ்விடயம் தொடர்பான கருத்தாடல்கள், வெளியீடுகள், விரிவுரைகள், பதாதைகளை காட்சிப்படுத்தல் போன்ற செயற்பாடுகள் ஊடாக மக்கள் தெளிவூட்டப்படவுள்ளனர்.
இன்றைய நாள் அரச, அரச கூட்டுத்தாபன அலுவலர்களின் விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி மேம்படுத்தல் தினமாக பெயரிடப்பட்டுள்ளது. நாளைய தினம் தனியார் துறைக்காகவும், பெப்ரவரி 8ஆம் திகதி சிறுவர் மற்றும் தாய்மார் தினமாகவும், பெப்ரவரி 9ஆம் திகதி மகளிருக்கான தினமாகவும், பெப்ரவரி 10ஆம் திகதி விசேட தேவையுடையவர்களின் தினமாகவும், பெப்ரவரி 11ஆம் திகதி இளையோருக்கான தினமாகவும், பெப்ரவரி 12ஆம் திகதி சமூக பங்களிப்புப் தினமாகவும் பெயரிடப்பட்டுள்ளன.
விளையாட்டின் ஊடாக தேசிய மற்றும் சர்வதேச மட்டத்திலான வெற்றிகளை பெறக்கூடியவாறு விளையாட்டுத் திறன்மிக்க ஆரோக்கியமான தலைமுறையினரை உருவாக்குவது இந்த நிகழ்ச்சியின் முதன்மை குறிக்கோளாகும். அதற்கிணைவாக அனைத்து அரச நிறுவனங்களிலும் நிகழ்வுகள் இடம்பெற்றன.
விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர, பிரதியமைச்சர் எச்.எம்.எம்.ஹாரிஸ், ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ.அபேகோன், விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் டி.எம்.ஆர்.பீ.திஸாநாயக்க ஆகியோரும் ஜனாதிபதி செயலக சிரேஷ்ட அலுவலர்கள் மற்றும் பணியாளர்களும் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.