பொது மக்கள் நியாயமான முறையில் செயற்படவும் உண்மையான செய்தியை உரிய முறையில் பெறவும் ஊடகவியலாளர் சுதந்திரமான முறையில் செயற்படுவதற்கும் ஏற்ற முறையில் சுயாதீன ஊடக ஆணைக்குழு
நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.
கண்டிக்கு விஜயமொன்றை மேற்கொண்டிருந்த அமைச்சர் தலதா மாளிக்கைக்கு சென்று வணங்கிய பின்னர் கண்டி அஸ்கிரிய மகாநாயக்க தேரரை சந்தித்து ஆசிர்வாதம் பெற்றுகொண்ட பின்னர் மேற்கொள்ளப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவ்வாறு கூறினார்.
அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், சுதந்திர ஊடக ஆணைக்குழுவை உருவாக்குவது மற்றும் மேலும் சில விடயங்கள் தொடர்பில் மகாநாயக்க தேரர் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. அவ்விடயங்களுக்கான தேரர்களின் ஆசிர்வாதமும் எங்களுக்கு கிடைத்துள்ளது.
அரசியல் லாபம் கருதி நாம் எதையும் செய்யவில்லை. குறித்த விடயங்கள் தொடர்பில், சமயத் தலைவர்கள், பொதுமக்கள், கல்விமான்கள், ஊடக அமைப்புக்கள் மற்றும் சிவில் அமைப்புக்களிடம் கருத்துக்களை பெற்றுள்ளோம்.
இலத்திரனியல் ஊடகவியலாளர்களுக்கான எவ்வித ஒழுங்கும் நியதியும் இல்லை. ஊடகத்துறை சார்ந்தவர்களுக்கேற்படும் அநீதிகள் தொடர்பில் முறையிடுவதற்கோ பதிவு செய்வதற்கோ ஓரிடம் இல்லை. இலத்திரனியல் ஊடகங்களுக்கும் இது பொருந்தும்.
ஊடகவியலாளர்கள் சுதந்திரமாக இயங்குவதற்கும் பொதுமக்கள் பிழையற்ற உண்மை செய்திகளை தெரிந்துக்கொள்வதற்கும் சுயாதீன ஆணைக்குழு நியமிக்கப்படுகிறது என்று அமைச்சர் மேலும் தெரிவித்தார்.