கடந்த போர்க்காலத்தில் இராணுவம், கடற்படை, விமானப்படை, பொலிஸார் உட்பட்ட அனைத்து பாதுகாப்பு தரப்பினரினதும் உயிர்த்தியாகங்கள், அர்ப்பணிப்புகளை நன்றியுடன் நினைவுகூர்ந்து, அவர்களுக்கு வழங்கக்கூடிய
உயர் கௌரவத்தை வழங்குவது போன்றே எதிர்கால சவால்களை வெற்றிகொள்வதற்காக அனைத்து வகைகளிலும் அவர்களை பலப்படுத்தும் பொறுப்பை அரசாங்கம் நிறைவேற்றுவதாக ஜனாதிபதி தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா சிங்க ரெஜிமென்றுக்கு ஜனாதிபதி கோல் மற்றும் ரெஜிமென்ற் கோல் வழங்குவதற்காக நேற்று (30) பிற்பகல் நடைபெற்ற விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இலங்கை இராணுவத்தின் புகழ்மிக்க ஸ்ரீலங்கா சிங்க ரெஜிமென்ற் நாட்டின் தேசிய பாதுகாப்புக்காக நிறைவேற்றிய பெருமைமிகு, சிறப்பான செயற்பாடுகளை ஜனாதிபதி இதன்போது பாராட்டினார்.
இலங்கை இராணுவத்தின் ஏனைய ரெஜிமென்றுகளுக்கு சமமாக சிங்க ரெஜிமென்ற், நாட்டுக்கும் மக்களுக்கும் ஆற்றிய சேவையை பாராட்டி இதுவரை காலமும் வர்ணம் வழங்கப்பட்டிருக்கவில்லை. ரைபிள் ரெஜிமென்ற் வர்ணத்தை கொண்டிருப்பதில்லை எனும் பாரம்பரியத்தை பாதுகாப்பதே அதற்கு காரணம். ஆனால் பிரித்தானியாவின் கிறீன் ஜெக்கெற்ஸ், குர்கா ரைபிள் ரெஜிமென்றுக்கு வர்ணத்துக்கு பதிலாக பிரித்தானிய விக்ரோறியா மகாராணியினால் 1983 ஆண்டில் வழங்கப்பட்ட விசேட ராணி கோல் அனைத்து சந்தர்ப்பங்களிலும் பாவிக்கப்பட்டுவதால், அந்த ரைபிள் ரெஜிமென்றின் தனித்துவமான பண்புகளுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ள சிங்க ரெஜிமென்ற் நாட்டுக்கு ஆற்றிய உன்னதமான சேவையைப் பாராட்டி இலங்கை இராணுவ வரலாற்றில் முதல் தடவையாக ஜனாதிபதி கோல் மற்றும் ரெஜிமென்ற் கோல் ஆகியவை ஜனாதிபதியால் வழங்கப்பட்டது.
அம்பேபுஸ்ஸ சிங்க ரெஜிமென்ற்றுக்கு விஜயம் செய்த ஜனாதிபதி கோலாகலமாக வரவேற்கப்பட்டதுடன், அணிவகுப்பு மரியாதையையும் ஏற்றுக்கொண்டார்.
சர்வதேச மட்டத்திலும் பாராட்டப்பட்ட ஸ்ரீலங்கா சிங்க ரெஜிமென்ற் வீரர்களால் உருவாக்கப்பட்ட சர்வதேச தராதரமுடைய நூலகத்தை திறந்துவைத்த ஜனாதிபதி நூலகத்தை பார்வையிட்டார்.
இதேவேளை, சீனதெனிய மகா வித்தியாலயத்தில் ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கான பரிசில்கள் ஜனாதிபதியால் வழங்கிவைக்கப்பட்டது.
அமைச்சர் பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா, பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்த்தன, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி ஆகியோர் உட்பட பாதுகாப்பு துறை உயரதிகாரிகளும் நிகழ்வில் பங்குபற்றினார்கள்.