சமூக வலுவூட்டல் மற்றும் நலன்புரி அமைச்சின் கீழியங்கிய உயர் கல்வி நிறுவனமான சமூக அபிவிருத்தி
நிறுவகத்தினால் முன்னெடுக்கும் அனைத்து டிப்ளோமா மற்றும் பட்டப்படிப்பு அனைத்தையும் ஜயவர்தன பல்கலைக்கழகத்தின் கீழ் வழங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் நேற்று (01) கைச்சாத்திடப்பட்டது.
அதற்கமைய, சமூக அபிவிருத்தி நிறுவகத்தினால் வழங்கப்படும் 'சமூக வேலை' பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு மற்றும் ஏனைய டிப்ளோமா பாடநெறிகள் அனைத்தும் ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் கீழ் இனி வழங்கப்படும்.
பத்தரமுல்லையில் அமைந்துள்ள அமைச்சின் கேட்போர்கூடத்தில் இப்புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. இப்புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் போது ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க, கலைபீடாதிபதி பேராசரியர் சந்தரகுமார், சமூக விஞ்ஞான கல்விப் பீடத்தின் பீடாதிபதி மயுர சமரசிங்க மற்றும் முகாமைத்துவ பிரிவின் பீடாதிபதி பேராசிரியர் வீரகோன் பண்டா ஆகியோரும் சமூக அபிவிருத்தி நிறுவகத்தின் சார்ப்பில் அதன் பணிப்பாளர் நாயகம் ரிட்லி ஜயசிங்க, மேலதிக பணிப்பாளர் நாயகம் காமினி அத்தநாயக்க ஆகியோர் உள்ளிட்ட அதிகாரிகளும் அமைச்சின் செயலாளர் மஹிந்த செனவிரத்ன, மேலதிக செயலாளர் சமன் உடவத்த மற்றும் அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க ஆகியோர் கலந்துகொண்டனர்.