மத்திய அதிவேக வீதி நிர்மாணிப்பின் இரண்டாம் கட்டம் இன்று (01) ஆரம்பமாகவுள்ளது.
பாராளுமன்ற சபாநாயகர் கரு ஜயசூரிய, உயர் கல்வி மற்றும் அதிவேக வீதி அபிவிருத்தி அமைச்சர் லஷ்மன் கிரியெல்லவின் அழைப்பின் பேரில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் தலைமையில் மத்திய அதிவேக வீதி நிர்மாணிப்பின் இரண்டாம் கட்டம் ஆரம்பமாகவுள்ளதாக உயர் கல்வி மற்றும் அதிவேக வீதி அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
குருணாகல, அலவ்வ, - கிரியுல்ல பிரதான வீதியில் குடாகம பிரதேசத்தில் அதிவேக பாதையின் இரண்டாம் கட்டம் ஆரம்பமாகிறது.
மீரிகமவில் இருந்து குருணாகல வரையில் 39.29 கிலோ மீற்றர் நீளத்தை கொண்ட மத்திய அதிவேக வீதியின் இரண்டாம் கட்டத்திற்காக 137.098 பில்லியன் ரூபா நிதி முதலீடு செய்யப்படவுள்ளது. 3.6 மீற்றர் என்ற வகையில் நான்கு பிரிவுகளை கொண்டதாக நிர்மாணிக்கப்படவுள்ள இவ்வீதியானது 23 மீற்றர் அகலத்தை கொண்டதாகும். ஐந்து வீதி மாற்ற மத்திய நிலையங்களைக் கொண்டதாக நிர்மாணிக்கப்படவுள்ள இவ்வதிவேக வீதி நிர்மாணிப்பு இரண்டாம் கட்டத்தில் மீரிகம, நாகலகமுவ, மல்பிட்டிய, பொதுஹர மற்றும் குருணாகல ஆகிய பிரதேசங்களில் இடைமாற்ற நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
2019ம் ஆண்டு மத்தியளவில் இவ்வீதியின் நிர்மாணிப்புப் பணிகள் பூர்த்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
இலங்கையின் அதிவேக வீதித் தொகுதியில் மத்திய மாகாண அதிவேக பாதை முக்கிய இடம் வகிக்கிறது. குறிப்பாக நாட்டில் பல மாகாணங்களை ( மேல்மாகாணம், சப்ரகமுவ மாகாணம், மத்திய மாகாணம், வட மேல் மாகாணம், வடமத்திய மாகாணம்) ஆகிய மாகாணங்களை இணைக்கும் வகையில் உருவாக்கப்படும் இவ்வதிவேக வீதி நிர்மாணிப்புப் பணிகள் பூர்த்தியடைந்தவுடன் மாகாணங்களுக்கிடையிலான போக்குவரத்து இலகுபடுத்தப்படும் என்று அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.