எதிர்வரும் பெப்ரவரி மாதம் 4ம் திகதி கொண்டாடப்படவுள்ள இலங்கையின் 69 ஆவது சுதந்திர தின ஒத்திகை நடவடிக்கைகளை முன்னிட்டு இன்று (28) முதல் எதிர்வரும் 04 ஆம் திகதி வரை கொழும்பில் விசேட போக்குவரத்துத் திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் திணைக்களம் அறிவித்துள்ளது.
கொழும்பு காலி முகத்திடல் பகுதியில் இந்த விசேட போக்குவரத்துத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
அதற்கமைய காலி வீதியின் காலிமுகத்திடல் சுற்றுவட்டம் தொடக்கம் பழைய பாராளுமன்றம் வரையான வீதி இன்றும் நாளையும், காலை 7 மணி முதல் ஒத்திகை நிறைவு பெறும் வரை மூடப்படும் என போக்குவரத்து பிரதி பொலிஸ் மாஅதிபர் பாலித பெர்ணான்டோ குறிப்பிட்டுள்ளார்.
பொலிஸ் தலைமையகத்தில் நேற்று (27) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் இதனை குறிப்பிட்டார்.
எதிர்வரும் முதலாம் மற்றும் இரண்டாம் திகதிகளில் காலை 8 மணித் தொடக்கம் நண்பகல் 12 மணி வரை குறித்த வீதி முற்றாக மூடப்பட்டிருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தவிர சுதந்திர தினத்தன்று அதிகாலை முதல் சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் நிறைவு பெறும் வரை காலி முகத்திடலை அண்மித்த அனைத்து வீதிகளிலும் போக்குவரத்தை தடை செய்ய தீர்மானித்துள்ளதாக போக்குவரத்து பிரதி பொலிஸ் மா அதிபர் மேலும் சுட்டிக்காட்டினார்.