இலங்கையில் கல்வி சீர்த்திருத்தங்களை மேற்கொள்வது தொடர்பிலான முன்மொழிவுகள் அடங்கிய தேசிய கொள்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் நேற்று (26) கையளிக்கப்பட்டது.
ஜனாதிபதியின் உத்தியோகப்பூர்வ இல்லத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் தேசிய ஆணைக்குழுவும் தேசிய கல்வி நிறுவனமும் மேற்கொண்ட ஆய்வுகளையடுத்து தயாரிக்கப்பட்ட புதிய முன்மொழிவுகளுடனான தேசிய கொள்கையே ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.
புதிதாக உருவாகும் தேவைகள், சவால்களுக்கு முகம்கொடுத்து கற்கும் வகையில் இப்புதிய கொள்கை தயாரிக்கபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன் போது கருத்து தெரிவித்த ஜனாதிபதி, மாணவர்களின் ஆக்கத்திறன், திறமைகளுக்கேற்ற சந்தர்ப்பங்கள் கல்விக்கொள்கைகளில் உள்ளடக்கப்படவேண்டியது மிக அவசியம் என்று சுட்டிக்காட்டினார்.
மேலும் கல்வித்துறையில் மனித வளம் போன்றே பௌதீக வளங்களும் முறையாக வழங்கப்படாதுள்ளமை பாரிய பின்னடைவு என்றும் அடிப்படை வசதிகள் கூட இல்லாத பல பாடசாலைகள் இன்றும் எம் நாட்டில் உள்ளதை காணலாம் என்றும் தெரிவித்தார்.
தேசிய ஆணைக்குழுவும் தேசிய கல்வி நிறுவகமும் ஆறு மாதங்களுக்கு ஒரு தடவையேனும் கூடி புதிய மாற்றங்கள் தொடர்பில் கலந்துரையாடுவது அவசியம் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
இந்நிகழ்வில், ஜனாதிபதி செயலாளர் பி. பி. அபேகோன், தேசிய கல்வி ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் லஷ்மன் ஜயதிலக்க, தேசிய கல்வி நிறுவகத்தின் பணிப்பாளர் கலாநிதி ஜயந்தி குணசேக்கர உட்பட பல உயரதிகாரிகள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.