தேசிய நல்லிணக்கத்தை மேம்படுத்தும் வகையிலான செயற்றிட்டம் ஒன்றை இலங்கை இராணுவ சேவை அதிகாரசபை கிழக்கு மாகாணத்தில் ஏற்பாடு செய்துள்ளது.
பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜயவர்தன தலைமையில் நாளை (26) நடைபெறவுள்ள இச்செயற்றிட்டத்தினூடாக கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களில் உள்ள பொருளாதார ரீதியாக பாரிய பின்னடைவை சந்தித்துள்ள இராணுவத்தினரது குடும்பங்கள் மற்றும் ஏனைய குடும்பங்களிலுள்ள கற்றல் திறமை மிக்க பிள்ளைகளுக்கு பாடசாலை உபகரணங்கள் பகிர்ந்தளிக்கப்படவுள்ளன.
மண்முனை மேற்கு பிரதேச செயலகத்தில் இடம்பெறவுள்ள இந்நிகழ்வானது கடந்த மூன்று தசாப்தகால யுத்தத்தின் பின்னர் மூவின மக்களும் கிழக்கில் ஒன்றிணைந்து நடத்தப்படும் முதலாவது செயற்றிட்டமாகும்.
இச்செயற்றிட்டத்தினூடாக 500 மாணவர்களுக்கான பாடசாலை உபகரணங்கள் வழங்கப்படவுள்ளதுடன் மட்டக்களப்பு மாவட்ட படையினரின் பிள்ளைகளுக்கான புலமைபரிசில்களும் தெரிவு செய்யப்பட்ட படையினரின் குடும்பங்களுக்கு தையல் இயந்திரங்களும் வழங்கப்படவுள்ளதுடன் சிங்கர் ஸ்ரீலங்காவினால் தையல் பயிற்சிக்கான புலமைபரிசில்களும் வழங்கப்படவுள்ளன.
இராணுவ சேவை அதிகாரசபை, முப்படையினர், பொலிஸ் திணைக்களம் ஆகியவற்றின் அனுசரணையில் நடைபெறவுள்ள இச்செயற்றிட்டத்தில், ஏற்பாடுகளை இராணுவ சேவை அதிகாரசபையின் கிழக்கு மாகாண பிரதி பணிப்பாளர் நிஷாந்த கமலசிறி மற்றும் மட்டக்களப்பு மாவட்ட அதிகாரி கீதிக்கா ஜனயவர்தன ஆகியோர் மேற்கொண்டுள்ளனர்.
இந்நிகழ்வில், கிழக்கு மாகாண ஆளுநர், கிழக்கு மாகாண முதலமைச்சர், இராணுவசேவை அதிகாரசபையின் தலைவி அனோமா பொன்சேக்கா, பிரதி தலைவி உப்பலாங்கனி மாலகமுவ, முப்படையினர், பொலிஸார், பிரதேச பொறுப்பதிகாரிகள் உட்பனட பலர் கலந்துகொள்ளவுள்ளனர்.
இதுதவிர, மட்டக்களப்பு மாவட்ட இராணுவத்தினரது நட்புறவு ஒன்றுகூடலும் பொதுச்சேவை நிகழ்வொன்றும் நடத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.