இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பிற்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று (18) சுவீட்சர்லாந்தின் டவோஸ் நகரில் இடம்பெற்றது.
உலக பொருளாதார மாநாட்டில் கலந்துகொள்ள சுவீட்சர்லாந்து சென்றுள்ள அமைச்சர்களுக்கிடையில் இடம்பெற்ற இச்சந்திப்பில் இருநாடுகளுக்கிடையிலான இருதரப்பு உறவுகளை பலப்படுத்துவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது.
தெற்காசியாவில் ஒற்றுமையையும் ஸ்தீரத்தன்மையையும் உறுதிப்படுத்துவதுடன் பாதுகாப்பான யுகத்தின் முக்கியத்துவம் குறித்தும் இக்கலந்துரையாடலின் போது கவனம் செலுத்தப்பட்டது. அத்துடன் தீவிரவாதம் மற்றும் வறுமையை முற்றாக இல்லாதொழிப்பதற்கான அடித்தளமிடலின் அவசியம் குறித்தும் இதன் போது சுட்டிக்காட்டப்பட்டது.
மேலும் சார்க் மாநாட்டின் எதிர்காலம், வலய பிரச்சினைகளை கலந்துரையாடல்கள் மற்றும் கொள்கைகளினூடாக தீர்ப்பது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.
இந்து சமுத்திரத்தின் கேந்திர நிலையமாக இலங்கை அமைக்கப்படுவதன் முக்கியத்துவம் குறித்து பாகிஸ்தான் பிரதமருக்கு விளக்கமளித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அதற்கான செயற்றிடங்கள் தொடர்பிலும் விளக்கமளித்தார்.
இருநாடுகளில் பல்துறை ஒத்துழைப்புகளை பலப்படுத்துவதற்கான கலந்துரையாடல்களை மேற்கொள்ள பாகிஸ்தானுக்கு விஜயம் செய்யுமாறும் இலங்கை பிரதமருக்கு பாகிஸ்தான் பிரதமர் அழைப்பு விடுத்தார்.
இச்சந்திப்பின் போது நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க, அபிவிருத்தி மூலோபாயங்கள் மற்றும் சர்வதேச வர்த்த அமைச்சர் மலிக் சமரவிக்கிர, ஜெனீவாகவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் ரவிநாத ஆரியசிங்க மற்றும் பிரமரின் மேலதிக செயலாளர் சமன் அதாவுதஹெட்டி ஆகியோர் உடனிருந்தனர்.