நாட்டின் விவசாய உற்பத்திகளை மேம்படுத்தி சுபீட்சமான நாட்டினைக் கட்டியெழுப்புவதற்கான அரசின் திட்டங்களையும் கொள்கைகளையும் மக்கள் மத்தியில் கொண்டு சென்று அவற்றை நடைமுறையில் செயற்படுத்தி
வெற்றிகரமான பெறுபேறுகளைப் பெற்றுக்கொள்ளக்கூடிய ஆற்றல் வெளிக்கள உத்தியோகத்தர்களுக்கே காணப்படுவதாக ஜனாதிபதி தெரிவித்தார்.
விவசாய அமைச்சின் கீழுள்ள அனைத்து நிறுவனங்களையும் சேர்ந்த அதிகாரிகளின் பங்குபற்றுதலுடன் இன்று (18) மாலை கொழும்பு ஆர். பிரேமதாச விளையாட்டரங்கில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.
‘பேண்தகு அபிவிருத்தியின் குறிக்கோள்களை ஒன்றிணைந்து வெற்றிகொள்வோம் – 2017 ஆம் ஆண்டில் நாட்டிலிருந்து வறுமையை இல்லாதொழிப்போம்.’ வலிமைமிகு இலங்கையை நோக்கிய அரசின் பொருளாதார திட்டங்கள் குறித்து அறிவூட்டுவதற்கும், வரட்சி நிலைமைகளின்போதான சவால்களை வெற்றிகொள்வதற்கு விவசாயத் துறையினை தயார்செய்வதற்காகவும் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
மக்களின் அன்றாட வாழ்க்கையின் சிக்கல்களை நீக்கி வறுமையை இல்லாதொழித்து அவர்களது பொருளாதாரத்தை உயர்த்துதல் அரசின் நோக்கமாகுமெனவும் அந்தக் குறிக்கோளினை நிறைவேற்றுவதற்காக அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டுமெனவும் ஜனாதிபதி அவர்கள் இதன்போது கருத்து தெரிவித்தார்.
வரட்சியை எதிர்கொண்டு அதன் பாதிப்புக்களை குறைப்பதற்கு புதிய திட்டமொன்றின் கீழ் செயற்படவேண்டியுள்ளதுடன் வரட்சியை அபிவிருத்தியின் பலமாக மாற்ற வேண்டுமெனவும் ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.
2016 ஆம் ஆண்டின் பெரும்போகத்தின் போது இயற்கை அனர்த்தங்களினால் அறுவடைக்கு ஏற்பட்ட அழிவுகளுக்கு எந்த விதமான காப்பீடுகளையும் பெற்றுக்கொள்ளாத விவசாயிகளுக்கு விவசாய மற்றும் கமநல காப்புறுதி சபையினூடாக நட்டஈட்டு வழங்குதல் ஜனாதிபதி அவர்களினால் அடையாள ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
கமநல அபிவிருத்தி பிரதேச உத்தியோகத்தர்களுக்கு கனணிகள் வழங்கி வைக்கப்பட்டதுடன் நாட்டிலுள்ள 521 கமநல சேவைகள் நிலையங்களையும் இணைக்கும் தகவல் தரவுத் தொகுதியும் இதன்போது ஜனாதிபதி அவர்களினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
அமைச்சர் துமிந்த திசாநாயக்க, இராஜாங்க அமைச்சர் வசந்த அலுவிஹார, பிரதி சபாநாயகர் திலங்க சுமதிபால ஆகியோரும் மாகாண விவசாய அமைச்சர்கள் மற்றும் அரச அதிகாரிகளும் இந் நிகழ்வில் பங்குபற்றினர்.