ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜனாபதியாக பதவியேற்று எதிர்வரும் 8ஆம் திகதியுடன் இருவருடங்கள் பூர்த்தியாகவுள்ள நிலையில் அதற்கு முன்னர் நாடு முழுவதும் பல்வேறு தொழிற்சாலைகள் உருவாக்கப்பட்டு 20,000 வேலைவாய்ப்புகள் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
குளியாப்பிட்டியில் இடம்பெற்ற வொக்ஸ்வகன் மோட்டார் வாகன தொழிற்சாலைக்கான அடிக்கல் நாட்டுவிழாவில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே பிரதமர் இதனை தெரிவித்துள்ளார்.
அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், மிகச் சிறிய காலத்திற்கு அதிக எண்ணிக்கையான தொழில்வாய்ப்புக்களை ஏற்படுத்த இயலுமாகியுள்ளமை மிகப் பெரிய வெற்றியாகும்.
பல்வேறு நாடுகளுக்கு விஜயம் செய்து முதலீடுகளை பெற்றுக்கொள்வதற்கு பிரதான காரணம் நாட்டில் வருமானத்தை ஏற்றுமதி மற்றும் அந்நிய செலவாணி என்பவற்றை அதிகரித்துக்கொள்வதாகும்.
அபிவிருத்தித் திட்டங்களை நடைமுறைப்படுத்துவது ஒரு குற்றமா என்று இத்தகைய அபிவித்தி திட்டங்களை பிரமர்சிப்பவர்களை பார்த்து நான் கேட்க விரும்புகிறேன்.
மக்கள் துன்புற்றது போதும். அதனால் அபிவிருத்தியை தொடர்ந்தும் நடைமுறைப்படுத்துவோம். எதிர்காலச் சந்ததியினருக்கு கடன் சுமையை சுமத்தப் போவதில்லை. எதிர்வரும் 2020 எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றும் வகையில் செயற்படுவோம் என்றும் பிரதமர் தெரிவித்தார்.
நேற்று (03) அடிக்கல் நாட்டப்பட்ட வொக்ஸ் வெகன் தொழிற்சாலை நிர்மாணிப்பினூடாக 2500 வேலைவாய்ப்புக்கள் உருவாக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.