பிறந்துள்ள புத்தாண்டில் ஊடகத்துறையில் பல்வேறு மறுசீரமைப்புக்கள் ஏற்படுத்தப்படவுள்ளதுடன் ஒழுங்கமைப்பு ஆணைக்குழுவும் அமைக்கப்படும் என்று பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக்க தெரிவித்தார்.
நேற்று (02) புத்தாண்டில் கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வில் சர்வமத நிகழ்வு மற்றும் புத்தாண்டு சத்தியப்பிரமாணத்தின் பின்னர் அமைச்சு மற்றும் தகவல் திணைக்கள ஊழியர்கள் மத்தியில் உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், ஜனாதிபதி மற்றும் பிரதமரின் தலைமையில் மக்கள் கருத்துக்களை பெற்று ஊடகத்துறையில் மாற்றமொன்றை மேற்கொள்வதற்கான பாரிய பொறுப்பை நாம் ஏற்றுக்கொண்டுள்ளோம். ஊடக அமைச்சின் கீழ் உள்ள அனைத்து நிறுவனங்களிலும் முன்னேற்றத்துடன் அடுத்தக் கட்டத்திற்கு செல்லும் வருடமாக 2017 காணப்படுகிறது.
வீட்டை விட்டு வெளியேறி அதிக நேரம் கடமையாற்றும் இடம் வேலைத்தளம்தான். அதனால் அந்த இடத்தில் ஒவ்வொரு விநாடியும் மகிழ்ச்சியுடன் கழிப்பதற்கான சூழலை ஏற்படுத்த வேண்டும். நாம் அமைச்சர் என்றவகையில் திருப்திகரமாக பணியாற்றுவதற்கான சூழலை உங்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்க நாம் தயாராய் உள்ளோம். அந்நிலை தற்போது ஏற்படுத்தப்பட்டுள்ளது. உங்களுக்கு அனுபவம் உள்ளது என்று அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
இந்நிகழ்வின் போது பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் ஊடகத்துறை பிரதியமைச்சர் கருணாரத்ன பரணவித்தான, அமைச்சின் மேலதிக செயலாளர் எச்.டீ.எஸ்.எஸ். மல்காந்தி மற்றும் பி.கே.எஸ் ரவீந்தர உட்பட பலர் கலந்துகொண்டிருந்தனர்.