தொல்பொருள் மரபுரிமைகளை பாதுகாப்பதற்கான விசேட நடவடிக்கை எதிர்வரும் ஜனவரி மாதம் முதலாம் திகதி தொடக்கம் நடைமுறைப்படுத்தப்படும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் சேவாவனிதா பிரிவினால் நான்காம் கட்டமாக நிர்மாணிக்கப்பட்ட 219 வீடுகளை உரியவர்களிடம் கையளிக்கும் நிகழ்வு இன்று (23) கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றபோது கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.
ஜனாதிபதி தொடர்ந்து தெரிவிக்கையில், இனத்தின் சிறந்த வரலாறு மற்றும் நாகரீகம் என்பவற்றுக்கு சாட்சியாவது தொல்பொருள் மற்றும் வரலாற்றுச் சின்னங்களாகும். அவை அழிவதென்பது நாட்டின் வரலாறு மற்றும் கலாசாரம் அழிந்து போவதற்கு சமமாகும்.
தொல்பொருள் திணைக்களம் மற்றும் சிவில் பாதுகாப்புத் திணைக்களம் ஆகியவற்றுடன் இணைந்து தொல்பொருள் சிறப்பு மிக்க இடங்களை பாதுகாப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது என்று அவர் மேலும் தெரிவித்தார்.
இந்நிகழ்வின் போது நிர்மாணிக்கப்பட்ட இல்லங்கள் கையளிக்கப்பட்டதுடன், சிவில் பாதுகாப்புத் திணைக்கள ஊழியர்களின் 31,845 பிள்ளைகளுக்கு 11 மில்லியன் ரூபா பெறுமதியான பயிற்சிப் புத்தகங்கள்,க.பொ.த சாதாரண தரத்தில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற 123 பிள்ளைகளுக்கு 15,000 ரூபா பெறுமதியான புலமைபரிசில்களும், க.பொ.த உயர்தர பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற 54 பிள்ளைகளுக்கு 40,000 ரூபா பெறுமதியான புலமைபரிசில்களும், க.பொ.த உயர்தரத்தில் தோற்றி பல்கலைக்கழக தெரிவு பெற்ற 74 பிள்ளைகளுக்கு மடிக்கணனிகளும் வழங்கப்பட்டன.
கடந்த யுத்த காலத்தில் நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த முப்படை மற்றும் சிவில் படையினரையும் இதன் போது ஜனாதிபதி நினைவு கூர்ந்தார்.
இந்நிகழ்வில் பாதுகாப்புச் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி, முப்படையின் தளபதிகள், சிவில் திணைக்கள பணிப்பாளர் நாயகம் சந்ரசேன பல்லேகம, இராணுவசேவை அதிகாரசபையின் தலைவி அனோமா பொன்சேக்கா உட்பட பல உயரதிகாரிகள், சிவில் பாதுகாப்புத் திணைக்கள சேவா வனிதா பிரிவின் தலைவி லஷ்மி பல்லேகம ஆகியோர் கலந்துகொண்டனர்.