பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் மாணவர் மத்தியில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்காக 'சகோதர பாடசாலை' திட்டம் இலங்கை முழுவதும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்க காரியாலயமும் மாகாண கல்வி அமைச்சும் இணைந்து இத்திட்டத்தை செயற்படுத்துகின்றன.
இத்திட்டத்தினூடாக இலங்கையிலுள்ள பாடசாலைகளின் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் தேசிய ஒற்றுமை, பல்லினத்தன்மை மற்றும் நல்லிணக்கம் தொடர்பில் செயன்முறையுடன் தெளிவுபடுத்தப்படவுள்ளது.
பல்வேறு கட்டங்களாக முன்னெடுக்கப்படவுள்ள இச்செயற்றிட்டத்தின் முதற்கட்டமாக அடுத்த ஆண்டின் முதல் 6 மாதக்காலத்தில் வடக்கு, கிழக்கு, தெற்கு, மேற்கு மற்றும் மத்திய மாகாணங்களில் இருந்த தெரிவு செய்யப்பட்ட ஆசிரியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு பயிற்சி செயலமர்வுகள் நடத்தப்படவுள்ளன.
இரண்டாம் கட்டமாக சகோதர பாடசாலை என்ற தொனிப்பொருளில் தெற்கு மற்றும் கிழக்கு மாணவர்கள் இணைந்து மட்டக்களப்பிலும் மத்திய மாகாணம் மாணவ மாணவியருக்கு தம்புள்ளவிலும் பயிற்சி முகாம்கள் கடந்த வாரம் நடத்தப்பட்டன.
வடக்கு மற்றும் மேல்மாகாணம் உட்பட ஏனைய மாகாண மாணவர்களுக்கான பயிற்சி முகாம்கள் எதிர்வரும் 2017ஆம் ஆண்டு நடத்தப்படவுள்ளதுடன் இது தொடர்பில் ஆசிரியர்களை தெளிவுபடுத்தும் செயற்பாடுகள் தற்போது முன்னெடுக்கப்படுகின்றன.
ஐந்து நாள் முகாம்கள் நடத்தப்படுவதனூடாக மாணவர்கள் ஒருவரை ஒருவர் அறிந்துகொள்ள வாய்ப்புகள் கிடைப்பதுடன் இலங்கையில் காணப்படும் பல் கலாசாரத்தன்மை, பல் கலாசாரம், சமயம் என்பவை தொடர்பில் அறிந்துகொள்ள வாய்ப்புகள் ஏற்படுத்திக்கொடுக்கப்படும். மாணவர் மத்தியில் ஏற்படுத்தப்படும் இம்மாற்றமானது சமூகத்தில் சிறந்த மாற்றங்களை ஏற்படுத்த காரணமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்க காரியாலயத்தின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க உட்பட மாகாண கல்வி அமைச்சின் அதிகாரிகள் மட்டக்களப்பு மற்றும் தம்புள்ள ஆகிய இடங்களில் நடைபெற்ற முகாம்களில் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.