பாதசாரிகள் கடவைகளை வெள்ளை நிறத்திற்கு மாற்ற தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை அறிவித்துள்ளது.
பாதையை கடக்கும்போது பயன்படுத்தப்படும் மஞ்சட் கோட்டு கடவைகளை, சர்வதேச தரத்திற்கு மேம்படுத்தும் நோக்கிலேயே குறித்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக, வீதி அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் நிஹால் சூரிய ஆரச்சி சுட்டிக்காட்டினார்.
இலங்கையிலுள்ள அனைத்து பாதைகளிலும் உள்ள மஞ்சட் கடவைகளும் வெள்ளை நிறத்திற்கு மாற்றப்படவுள்ளதாக அவர் தெரிவித்ததோடு, இந்நிகழ்வு அனைத்து மாகாணங்களிலும் விசேட நிகழ்வாக மேற்கொள்ளப்படவுள்ளதாகவும், எதிர்வரும் டிசம்பர் 03 ஆம் திகதி மேல் மாகாணத்தில் ஆரம்பிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
வெள்ளை நிறம் மிகவும் தெளிவாக தென்படக்கூடியது என்பதோடு, விசேடமாக இரவு நேரங்களில் மிகத் தெளிவாகத் தென்படும் என்பதே, உலகளாவிய ரீதியில் பாதசாரிகள் கடவைகள் வெள்ளை நிறத்தில் பேணுவதற்கு காரணமாகும் என அவர் சுட்டிக்காட்டினார்.