கடந்த 2015- இந்த ஆண்டு வரை 4485 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளது என மட்டக்களப்பு மாவட்டச் செயலாளர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்தார்.
இன்று (08) மட்டு மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற இவ்வருடத்திற்கான அபிவிருத்தி திட்டங்களுக்கான மீளாய்வுக் கூட்டத்திலேயே அமைச்சர் இதனை தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், நிர்மாணிக்கப்பட்ட வீடுகள் போரால் பாதிக்கப்பட்ட கணவனை இழந்த 1070 பெண்களுக்கும், 73 மாற்றுத் திறனாளிகளுக்கும் 45 காணாமல் போனோர் குடும்பங்களுக்கும் 294 முன்னாள் போராளிகளுக்கும் வழங்கப்பட்டுள்ளன.
மீள்குடியேற்ற அமைச்சினால் 2015 மற்றும் 2016ஆம் ஆண்டுகளில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்கள், விசேட தேவையுடையோர், காணாமல் போனவர்களது குடும்பங்கள், புனர்வாழ்வழிக்கப்பட்ட முன்னாள் போராளிகள், போரால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு 820 மில்லியன் ரூபா செலவில் 1025 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டன.
அத்துடன் இந்திய வீட்டுத்திட்டத்தின் கீழ் 2880 வீடுகள் முன்னாள் போராளிகள், போரால் பாதிக்கப்பட்டவர்கள், வன்னியிலிருந்து இடம்பெயர்ந்தவர்கள், இந்தியாவிலிருந்து நாடு தரும்பியவர்கள் அடங்கலாக 1584 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்டு பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டுள்ளன.
யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மாவட்டத்தின் மீள்குடியேற்ற பகுதிகளின் 48 உட்கட்டமைப்பு அபிவிருத்தி திட்டங்களுக்காக மீள்குடியேற்ற அமைச்சு ஒதுக்கப்பட்ட 177.87 மில்லியன் ரூபா ஒதுக்கியுள்ளது. நிர்மாணப்பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
மேலும், 236 குடிநீர் விநியோகத்தட்டங்களுக்காக 103 மில்லியனும், பகுதியளவில் சேதமடைந்த வீடுகள் 760 திருத்துவதற்காக 145.20 மில்லியன் ரூபாவும், 1000 மலசலகூடவசதிகளுக்காக 55 மில்லியன் ரூபாவும், அத்துடன் 1033 வாழ்வாதார மேம்பாட்டு நடவடிக்கைகளுக்காக 100 மில்லியன் ரூபாவும் ஒதுக்கப்பட்டு பெரும்பாலான வேலை நிறைவடைந்துள்ளதுடன் ஏனைய வேலைகளை உடனடியாக நவம்பர் மாதத்திற்குள் நிறைவு செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதியுதவியுடன் மேலும் 580 வீடுகள் மீள்குடியேற்றப் பகுதிகளில் ஆரம்பிக்கப்படவுள்ளன என்றும் மாவட்டச் செயலாளர் மேலும் தெரிவித்தார்.
LDA_dmu_batti