கடமையிலிருந்த இடைவிலகிய விசேடத் தேவைக்குரிய படையினருக்கான ஓய்வூதியம் எதிர்வரும் பெப்ரவரி மாதம் தொடக்கம் வழங்கப்படும் என்று பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
தற்போது வழங்கப்படும் கொடுப்பனவுகளுக்கு மேலதிகமாக இவ்வோய்வூதியம் வழங்கப்படும் பாதுகாப்பு அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இராணுவத்தினருக்கான ஓய்வூதிய சட்டப்படி 12 வருடங்கள் கடமையாற்றி ஓய்வு பெற்றோருக்கே ஓய்வூதியம் வழங்கப்படும். இதனால் நாட்டில் நிலவிய அசாதாரண சூழ்நிலை காரணமாக யுத்தத்தினால் அங்கவீனமுற்று 12 வருட சேவைக்காலத்திற்கு முன்னர் ஓய்வு பெற்ற படையினருக்கு கொடுப்பனவு மட்டுமே வழங்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் கடந்த வாரம் தொடக்கம் அப்படையினர் தமக்கும் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்று கோரி முற்றுகை போராட்டம் நடத்தியதுடன் உண்ணாவிரத போராட்டத்தையும் ஆரம்பித்தனர். இதனால் பாதிக்கபட்ட 3 படையினர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதனையடுத்தே பாதுகாப்பு அமைச்சு குறித்த படையினருக்கான ஓய்வூதியத்தை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதுடன் எதிர்வரும் பெப்ரவரி மாதம் தொடக்கம் வழங்கப்படவுள்ளதாக அறிக்கை வெளியிட்டுள்ளது.