நாட்டில் நிலவிய மோசமான காலநிலை காரணமாக கடந்த 29ம் திகதி தொடக்கம் நேற்று வரையான (03) காலப்பகுதியில் 17 மாவட்டங்களைச் சேர்ந்த 32,149 குடும்பங்களைச் சேர்ந்த 111,912 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.
மோசமான காலநிலை காரணமாக இதுவரையில் 14 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் 84 பேர் காயமடைந்துள்ளனர் என்றும் 14 பேர் காணாமல் போயுள்ளனர் என்றும் மத்திய நிலையம் சுட்டிக்காட்டியுள்ளது.
களுத்துறை, கொழும்பு, கம்பஹா, காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை, மொனராகலை, பதுளை, புத்தளம,கண்டி, நுவரரெலியா, மாத்தளை, இரத்தினபுரி, கேகாலை, அநுராதுபுரம் மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களிலுள்ள 142 பிரதேச செயலக பிரிவைச் சேர்ந்த பொதுமக்களே இவ்வாறு மோசமான காலநிலையினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அனர்த்த முகாமைத்துவ மத்தியநிலையத்தின் பிரதி பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கடுமையான மழை மற்றும் வௌ்ளம் காரணமாக 1426 குடும்பங்களைச் சேர்ந்த 5664 தனிநபர்கள் 64 தற்காலிக நிலையங்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
கடுமையான மழை, காற்று காரணமாக 715 வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளதுடன் ஆயிரக்கணக்கான வீடுகள் பாதியளவு சேதமடைந்துள்ளன. 364 வியாபார நிலையங்கள் சேதமடைந்துள்ளன என்றும் பிரதி பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
.