உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்பு மனு கோரும் அறிவித்தல் இம்மாதம் 27 ஆம் திகதி வெளியிடப்படவுள்ளது என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய அறிவித்துள்ளார்.
உள்ளூராட்சி தேர்தல் தொடர்பான முக்கிய கூட்டமொன்று நேற்று (17) தேர்தல் ஆணைக்குழுவில் நடைபெற்றபோதே தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் இத்தகவலை வௌியிட்டார்.
இதற்கமைய எதிர்வரும் நவம்பர் மாதம் 27ம் திகதியில் இருந்து 14 நாட்களுக்கு வேட்பு மனு தாக்கல் ஆரம்பிக்கப்படும் என்றும் 17ம் திகதி நண்பகல் 12 மணியுடன் வேட்பு மனுத்தாக்கல் நிறைவுக்கு வரவுள்ளது என்றும் வேட்பு மனு தாக்கல் செய்வதற்காக மூன்றரை நாட்கள் ஒதுக்குவது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இவ்விசேட கூட்டத்தில், தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தலைமையில் அதன் உறுப்பினர்களான முன்னாள் சட்ட வரைஞரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான நளின் அபயசேகர மற்றும் பேராசிரியர் ரட்ணஜீவன் எச்.ஹூல் கூடி உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் ஆராய்ந்தனர்.
இம்முறை 25 வீத பெண்கள் பிரதிநிதித்துவம் இல்லாத வேட்பாளர் பட்டியல் நிராகரிக்கப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.