இலங்கையில் நகர்புறங்களில் வாழும் முதியவர்களில் 50 வீதமானவர்கள் ஆரம்ப நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளதாக இலங்கை நீரிழிவு சம்மேளனத்தின் தலைவர் விசேட வைத்தியநிபுணர் பிரசாத் கடுலந்த தெரிவித்துள்ளார்.
உலக நீரிழிவு தினத்தை முன்னிட்டு பெண்களும் நீரிழிவும் என்ற தொனிப்பொருளில் சுகாதார ஊக்குவிப்பு காரியாலயம் நேற்று (09) கொழும்பில் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்தபோதே அவர் இதனை தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், அவ்வாய்விற்கமைய கொழும்பில் வாழும் முதியவர்கள் 25 வீதமானவர்களும் யாழ்ப்பாணத்தில் வாழும் முதியவர்களில் 20 வீதமானவர்களும் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நாட்டில் தொற்றாத நோய் தாக்கத்தில் பிரதான இடத்தை வகிக்கும் நீரிழிவை இல்லாதொழிப்பதற்கு அரசாங்கம் மாத்திரமே முயற்சி செய்து போதாது. சமூகத்தின் பாரிய பங்களிப்பு இதற்கு அவசியம். பெண்களுக்கு நீரிழிவு நோய் ஏற்படும் வாய்ப்புகள் அதிகமாக காணப்படுகிறது. சில பெண்களுக்கு கர்ப்பிணிகளாக இருக்கும்போது நீரிழிவு நோய் ஏற்படுகிறது. சரியான உணவு பழக்க வழக்கங்கள், உணவுக்கட்டுப்பாடு, போஷாக்கான உணவை உட்கொள்ளல் மற்றும் உடற்பயிற்சி போன்றவற்றினூடாக நீரிழிவு, கொலஸ்ட்ரோல் மற்றும் உயர் இரத்த அழுத்தம் போன்ற தொற்றா நோய்களின் தாக்கத்தில் இருந்து விடுபடமுடியும். இதில் பெண்களின் பங்களிப்பு அதிகளவிருத்தல் வேண்டும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
இதன்போது கருத்து தெரிவித்த விசேட வைத்தியநிபுணர் மனில்க சுமனதிலக்க, இலங்கையில் நீரிழிவினால் மட்டும் பாதிக்கப்பட்டவர்கள் 10 வீதமும் நீரிழிவு மற்றும் கொலஸ்ட்ரோலினால் பாதிக்கப்பட்டவர்கள 16 வீதமும் நீரிழிவு, கொலஸ்ட்ரோல் மற்றும் உயர் இரத்த அழுத்தம் ஆகிய மூன்றினாலும் பாதிக்கப்பட்டவர்கள் 56 வீதமும் உள்ளனர் என்று ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
மேலும் நாளுக்கு நாள் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் எதிர்வரும் 10 ஆண்டுகளில் நோயாளர்களுக்கு சிகிச்சை வழங்குவதற்காக அரசாங்கம் 5000 கோடி ரூபாவும் சிறுநீரக மாற்று சிகிச்சைக்காக 10,000 கோடி ரூபாவும் நீரிழிவினால் பாதங்களில் ஏற்படும் பல்வேறு பிரச்சினைகளுக்கு சிகிச்சை வழங்குவதற்காக 10,000 கோடி ரூபாவும் நிதியொதுக்கவேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படும் என்றும் விசேட வைத்தியநிபுணர் சுமனதிலக்க சுட்டிக்காட்டியுள்ளார்.
கடந்த யுத்த காலத்தில் பாதங்களை இழந்தவர்களை விடவும் நீரிழிவு நோயினால் பாதங்களை இழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இவ்வூடகவியலாளர் சந்திப்பில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் ஜயசுந்தர பண்டாரவும் கலந்துகொண்டார்.