மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை மேற்கு பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்தின் ஏற்பாட்டில், போதைப் பொருளற்ற நாடு' எனும் தொனிப்பொருளில் இளைஞர் போதைத் தடுப்பு சமூகநல விழிப்புணர்வு வேலைத்திட்டம் இன்று (29) வவுணதீவு பிரதேச சபை மண்டபத்தில் நடைபெற்றது.
மண்முனை மேற்கு பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்தினதலைவர் ரி.விமல்ராஷ் தலைமையில் பிரதேச இளைஞர் சேவை அதிகாரியின் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இந்த வேலைத்திட்டத்தில் போதைப்பொருள் மற்றும் மதுபான பாவனையிலிருந்து இளைஞர்களை விடுவிப்பதற்கும், மதுபானம் போதைப்பொருள் தடுப்பு மற்றும் உபாய வழிமுறைகளை முன்னெடுப்பதற்கும் சிந்திப்பதற்குமான தெளிவூட்டல் ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
ஆலோசனை வழிகாட்டல்கள் மண்முனை மேற்கு, மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர் வி. விஜயகுமார், வவுணதீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜனாப் பி.ரி.நஸீர், ஈச்சந்தீவு ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலய பிரதம குருக்கள் இரா.அருளானந்தம் குருக்கள் ஆகியோர் வழங்கினர்.
இந் நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மாவட்ட இளைஞர் சேவை அதிகாரி திருமதி நிசாந்தி அருள்மொழி, மண்முனை மேற்கு பிரதேச இளைஞர் கழகங்களின் சம்மேளன ஆலோசகரும் முனைப்பு ஸ்ரீ லங்கா நிறுவனத்தின் தலைவரும் முல்லைத்தீவு மாவட்ட இளைஞர் சேவை அதிகாரியுமான மா.சசிகுமார், மட்டக்களப்பு மாவட்ட தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் நிஸ்கோ கூட்டுறவு சங்கத்தின் முகாமையாளர் சா.கிருபைராசா, மண்முனை மேற்கு பிரதேச இளைஞர் அபிவிருத்தி ஆலோசனை செயற்குழு நிருவாகிகளான எம்.அருணன் எஸ். சுசி, தி.தயாநிதி, வவுணதீவு அபிவிருத்தி நிறுவனத்தின் திட்ட இணைப்பாளர் மு.சதீஸ்குமார், இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் செல்வி அ.தர்ஷிக்கா ஆகியோர் கலந்துகொண்டனர்
இதன் போது போதைப்பொருள் மற்றும் மது தடுப்பு நடவடிக்கைகளுக்காக பிரதேச போதைத் தடுப்பு குழு ஒன்றும் ஆரம்பிக்கப்பட்டது.
LDA_dmu_batti