பேண்தகு அபிவிருத்தியின் இலக்கை அடையும் நோக்கில் ஐக்கிய நாடுகள் சபை மற்றும் கல்வியமைச்சு இணைந்து செயற்றிட்டமொன்றை ஆரம்பிக்கவுள்ளன.
ஐக்கிய நாடுகள் அமைப்பின் 72வது வருட பூர்த்தியை கொண்டாடும் வகையில் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.
வறுமையை ஒழித்தல், சூழல் பாதுகாப்பு, அனைவருக்கு வளமான வாழ்வை உறுதி செய்தல் உட்பட பேண்தகு அபிவிருத்தியின் 17 இலக்குகளை 2030 ஆண்டளவில் அடைவதற்கு மாணவர்களுக்கு பயிற்சியளிப்பதே இத்திட்டமாகும்.
அபிவிருத்தி நோக்குகளில் பலவற்றை அடைவதற்கான வழி கல்வியாகும். நாட்டின் எதிர்காலத்திற்கான வழியை உருவாக்குவதற்காக இலங்கை இளைஞர் சமுதாயத்திற்கு இத்திட்டம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
அதற்காக மாணவர்களை வலுவூட்டுவதற்காக பேண்தகு அபிவிருத்தி இலக்கை 2030ம் ஆண்டு அடைவதற்கு கல்வியமைச்சு முழுமையான ஒத்துழைப்பு வழங்குவதகாவும் அமைச்சர் உறுதியளித்துள்ளார்.
2030ம் ஆண்டு அபிவிருத்தி நோக்கை அடைவதற்கு இளைஞர் சமுதாயம் மிகவும் அவசியம் என்று ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி ஊனா மெக்கோலி தெரிவித்ததுடன், இலங்கையின் பேண்தகு அபிவிருத்திக்கு இளஞ்சமுதாயத்தை தலைவர்களாக இணைத்துக்கொள்வதன் முக்கியத்துவம் குறித்தும் சுட்டிக்காட்டினார்.