ஊடகவியலாளர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள், எப்போதும் சரியானவற்றை தெரிவுசெய்து, உண்மைக்கு மதிப்பளித்து தமது பேனா முனைகளை பாவிக்க வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
இன்று (19) முற்பகல் கொழும்பிலுள்ள நூலக ஆவணமாக்கல் சபையில் நடைபெற்ற சிரேஷ்ட ஊடகவியலாளரான அமரர் டி.பி.தனபாலவின் நினைவு முத்திரை வெளியீட்டு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு கூறியுள்ளார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த ஜனாதிபதி, சுயலாபத்துக்காக தவறு செய்யும் அரசியல்வாதிகளை பாதுகாத்து, அவர்களுக்கு ஊடகவியலாளர்கள் துதிபாடுவது மிகவும் துர்ப்பாக்கியமானது எனவும் ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.
எவ்வளவு தவறிழைத்தாலும் அவர்கள் தொடர்பில் குறிப்பிடாமல் இருப்பதும், எவ்வளவு சரியானதாக இருந்தாலும் சிலரை இலக்கு வைத்து தாக்குவதனையும் இன்று ஊடகங்களில் காணக் கூடியதாக உள்ளது என தெரிவித்த ஜனாதிபதி அவர்கள், மக்களுக்காக சரியான, தரமான, பெறுமதியானவற்றை சமூகத்துக்கு வழங்குவது அடுத்த சந்ததிக்காக ஊடகவியலாளர்கள் தமது பேனா முனையினால் ஆற்ற வேண்டிய பணியாகும்.
முன்மாதிரியான பத்திரிகையாளர் டி.பி.தனபால அவர்களது சமூக செயற்பாடுகளை ஜனாதிபதி அதன் போது பாராட்டினார்.
இலங்கை பத்திரிகை பேரவையினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வின் முதன்மை உரையை களனி பல்கலைக்கழக முன்னாள் ஊடகத்துறை துறை தலைவர் பேராசிரியர் ரோகண லக்ஷ்மன் பியதாஸ நிகழ்த்தினார்.
ஆங்கில பத்திரிகை ஊடகவியலாளராக ஊடகத்துறையில் நுழைந்த தனபால , சிங்கள பத்திரிகை துறைக்காக பெரும் சேவை ஆற்றிய, நாட்டில் சிறந்த ஊடகவியலாளர்களை உருவாக்குவதற்கு முன்னோடியாக செயற்பட்டவராவார். அனைத்து வாசகர்களுக்கும் ஏற்றவாறு சிங்கள பத்திரிகை துறையை விரிவுபடுத்தி மக்கள் கருத்துக்களுக்கு பத்திரிகையில் வாய்ப்பளிக்க அவர் எடுத்த முயற்சி குறிப்பிடத்தக்கதாகும்.
டி.பி.தனபால அவர்களது நினைவு முத்திரை ஜனாதிபதி அவர்களால் சிரேஷ்ட ஊடகவியலாளர்களுக்கும், டி.பி.தனபால அவர்களது பேரனான கலாநிதி தனுஷ்க மீகஹவத்த அவர்களுக்கும் வழங்கப்பட்டது.
சிரேஷ்ட ஊடகவியலாளர்கள், பத்திரிகை ஆசிரியர்கள், பத்திரிகை பேரவை தலைவர் சட்டத்தரணி கொக்கல வெல்லால உள்ளிட்டோர் நிகழ்வில் கலந்து கொண்டனர்.