மானிடம் கோலோட்சி அமைதியும் சமாதானமும் தோற்றம் பெற்று, மனிதன் தனது தனிப்பட்ட நோக்கங்களை அடைந்து கொள்வதற்காகவன்றி புண்ணியங்கள் மீதும் கவனஞ் செலுத்த வேண்டும் என்பதே தீபாவளி புகட்டும் பாடமாகும் என பிரதமர் தனது தீபாவளி வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளார்.
பிரதமரின் வாழ்த்துச் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, தீபாவளியின் ஞான ஒளியுடன் சகல இனங்களும் ஐக்கியமாக வாழும் சூழ்நிலையை ஏற்படுத்த வேண்டும்.
தீமை எனும் இருளிலிருந்து மீண்டு ஞானத்தின் ஒளியைப் பிரகாசிக்கச் செய்ய விளக்குகளை ஏற்றி தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடுவது இந்து மற்றும் சைவ சமயத்தினரின் வழக்கமாகும். தீபாவளி தினத்தின் உண்மையான அர்த்தம் அசத்தியத்தை ஒழித்து சத்தியத்தை மேலோங்கச் செய்வதுடன், குரோதத்தை நீக்கி அன்பை மேலோங்கச் செய்வதாகும். இதேபோன்று வெறுப்பை ஒழித்து, இரக்கத்தை மேலோங்கச் செய்யும் தர்மமும் இதிலுள்ளது. சார்ந்திருத்தலை ஒழித்து சுயாதீனத்தை மேலோங்கச் செய்வதில் தீபாவளியின் தத்துவங்கள் உன்னத வழிகாட்டுகின்றது.
இந்து பக்தர்களின் நம்பிக்கைக்கு ஏற்ப இன்றைய தினம் நரகாசுரனைத் தோற்கடித்த தினமாகும். 14 நாட்கள் வனவாசத்திலிருந்த இராமன் மற்றும் பாண்டவ இளவரசர்கள் மீண்டும் சமூகத்துடன் இணைந்துகொண்ட தினமாகவும் இன்றைய தினமே கருதப்படுகிறது. இவை அனைத்தும் தீங்குகள் ஒழிக்கப்பட்டு நன்மையின் தோற்றத்தையே அடையாளப்படுத்துகின்றன.
சைன சமயத்தவர்கள் தமது இறுதிப் போதகரான மகாவீரர் அவர்கள் மோட்ச நிலையை அடைந்த தினமாகவும் தீபாவளி தினத்தையே கருதுகின்றனர். அவ்வாறு நோக்கும்போது அன்பு, கருணை மற்றும் நேசத்தைப் பரப்பும் தினமாகவும் இன்றைய தினத்தை கருத முடியும்.
பிரிவதற்கு ஆயிரம் காரணங்கள் இருந்தபோதிலும் கூட தன்னுடைய உள்ளத்தின் ஞான ஒளியை இல்லாமற் செய்துவிடாமல் ஐக்கியமாக சமாதானத்துடனும் ஒற்றுமையுடனும் வாழ்வது நம் அனைவரினதும் பொறுப்பாகும். அந்தப் பிரார்த்தனையுடன் இந்து பக்தர்கள் உள்ளிட்ட அனைத்து மக்களுக்கும் மகிழ்ச்சியான, அமைதியான தீபாவளிப் பண்டிகையாக அமையட்டுமென வாழ்த்துகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.