டெங்கு நுளம்பு ஒழிப்பு உதவியாளர்களாக 200 பேருக்கு அரச நியமனம் வழங்கும் நிகழ்வு பொரளை காசல் வைத்தியசாலை கேட்போர்கூடத்தில் இடம்பெற்றது.
சுகாதார, போஷாக்கு மற்றும் சுதேச வைத்தியதுறை அமைச்சர் ராஜித்த சேனரத்ன தலைமயில் இந்நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
"2016 மற்றும் 2017ம் ஆண்டுகளில் பெய்த கடும் மழை மற்றும் வௌ்ளப்பெருக்கு காரணமாக டெங்கு நுளம்புகள் பரவும் அபாயம் தோன்றியது. இலங்கையில் அந்த தொற்று நோயை உடனடியாக கட்டுப்படுத்துவதற்கு எம்மால் முடியுமாகியது. இதற்கு உலக சுகாதார தாபனம் எமக்கு பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளது.
டெங்கு ஒழிப்பு உதவியாளர்கள் 1500 பேரை இணைத்துக்கொள்வதற்கு நான் நடவடிக்கை எடுத்தேன். ஐம்பது வாகனங்கள், ஜேர்மனியில் இருந்து 507 புகையடித்தல் கருவிகள் என்பனவும் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைக்காக பெற்றுக்கொடுத்தேன். சரியான முறையில் புகைத்தல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதால் டெங்கு நோய் தடுப்பு நடவடிக்கை துரிமாக மேற்கொள்ளப்பட்டு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
இதனால் டெங்கு காய்ச்சல் பரவும் வீதம் 90 வீதத்தால் குறைவடைந்தது. டெங்கு மற்றும் எச்ஐவி கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. சுகாதார சேவை தொழிலாளர் வெற்றிடங்களுக்கு பட்டதாரிகள் விண்ணப்பிக்கின்றனர். அந்த இடத்தில் இருந்த உயர்ந்த பதவிகளுக்கு செல்வதற்கு அவர்கள் நினைக்கிறார்கள்.
இலங்கையில் 9.5 இலட்சம் பேர் வரை தொழிலின்றி உள்ளனர். இப்படியான தொழிலாளவது கிடைப்பது குறித்து அவர்கள் மகிழ்ச்சிகொள்ள வேண்டும்.
க.பொ.த சாதாரணதரத்தில் 6 பாடங்களில் இரு பாடங்கில் விசேட சித்தி பெறாதவர்களுக்குத் தான் இத்தொழில் வழங்கப்படுகிறது. அதற்கான விசேட அமைச்சரவை அனுமதி பெறப்பட்டுள்ளது. டெங்கு ஒழிப்பு நடவடிக்கையில் குழுவாக இணைந்து செயற்படுங்கள் என்று இதன்போது அமைச்சர் கருத்து தெரிவித்தார்.
இந்நிகழ்வில், சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் ஜயசுந்தர பண்டார, சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் பி.ஜி.எஸ் குணதிலக, பிரதி பணிப்பாளர் நாயகம் டொனால்ட் முரகே, தேசிய டெங்கு ஒழிப்பு திட்டத்தின் பணிப்பாளர் ஹரித்த திசேரா ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.