கடந்த காலங்களில் ஏற்பட்ட வறட்சி மற்றும் மழைகாரணமாக விதை நெல்லை பெற்று கொள்வதில் விவசாயிகளிடையே பாரிய பிரச்சினை நிலவியதாக விவசாயிகள் தெரிவித்திருந்தனர்.
அதனை சீர்செய்யும் வகையில் விவசாய அமைச்சின் ஊடக பலவேலைத்திட்டங்கள், உணவு உற்பத்தி வாரத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய மானிய அடிப்படையின் கீழ் விதை நெல் வழங்கப்படவுள்ளது.
2017 மற்றும் 2018 ஆம் ஆண்டு காலபோகங்களில் விவசாய மக்களிடையே புத்துணர்ச்சியை உருவாக்கவும், உற்பத்திகளை அதிகரிப்பதற்காகவுமே தேசிய உணவு உற்பத்தி வாரம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இதன்கீழ் விவசாயிகள், சிறு வியாபாரிகள், மீனவர்கள், அரச ஊழியர்கள் உள்ளிட்ட பலர் நன்மையடைய முடியும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
அத்துடன், இந்த திட்டத்தின் கீழ் 25 ஆயிரம் வீட்டுத்தோட்டங்களும் உருவாக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, பல காரணங்களுக்காக நாட்டில் ஒரு லட்சத்து 30 ஆயிரம் ஹெக்டெயார் வயல் காணிகள் விவசாய நடவடிக்கைகள் இன்றி தரிசாக விடப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சின் அதிகாரி எஸ் பெரியசாமி குறிப்பிட்டார்.
எனவே அவற்றை மீண்டும் பயன்படுத்தக்கூடிய நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டு வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய ஒரு லட்சத்து 18 ஆயிரம் ஹெக்டெயர் காணிகளில் நெற்பயிர் செய்கை மேற்கொள்ளப்படவுள்ளதுடன், மிகுதி நிலங்களில் மறக்கரி உள்ளிட்ட பயிர்களையும் பயிரிடுவது தொடர்பான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டுள்ளதாகவும் விவசாய அமைச்சின் அதிகாரி எஸ் பெரியசாமி குறிப்பிட்டார்.
இதேவேளை, விவசாயத்தை ஊக்குவிக்கும் நோக்கில் 3 போகங்களில் விவசாய நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
அதாவது சிறுபோகம் மற்றும் காலபோக பயிர்ச்செய்கைகளுக்கு இடைப்பட்ட காலப்பகுதிகளில் அவரை, பாசிப்பயர், கௌப்பி உள்ளிட்ட தானியங்களையும் பயிரிடுவது தொடர்பிலும் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.
இதன்மூலம் எதிர் காலங்களில் இந்த நடவடிக்கைகள் நடைமுறைப்படுத்தப்படலாம் எனவும் விவசாய அமைச்சின் அதிகாரி எஸ் பெரியசாமி குறிப்பிட்டார்.