விவசாயம், நீர்ப்பாசன மற்றும் நீர்வள முகாமைத்துவம், சுற்றாடல் மற்றும் மகாவலி அபிவிருத்தி ஆகிய அமைச்சுக்கள் உள்ளிட்ட அமைச்சுக்களினதும் தனியார் துறையினதும் பங்களிப்புடன் பல நிகழ்வுகள் நாடு பூராவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. ஆரம்ப நிகழ்வுகள் தென் மாகாணத்திலுள்ள முருத்தவெல நீர்த்தேக்கத்துக்கு அருகிலும், சப்ரகமுவ மாகாண எம்பிலிப்பிட்டிய, ஊறுசிட்டாவெவ பகுதியிலும் இடம்பெறவுள்ளன.
அதனோடிணைந்ததாக சிறிய குளங்கள் மற்றும் அணைக்கட்டுக்கள், நீர்ப்பாசன கட்டமைப்புகளை புனரமைத்தல், துப்பரவு செய்தல் மற்றும் பராமரித்தல் செயற்பாடுகளுக்காக கமக்காரர் அமைப்புகளுக்கான உபகரணங்களை வழங்குதல் மற்றும் நீர் முகாமைத்துவ கருத்தரங்குகள் நாடு பூராகவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தரிசு நிலங்களில் பயிர்ச்செய்கையில் ஈடுபடும் செயற்பாடுகளும் மாவட்ட மட்டத்தில் 2017 ⁄ 2018 பெரும்போகத்துடன் ஆரம்பிக்கப்படவுள்ளன.
விவசாய அமைச்சினால் நாடு பூராகவும் கமக்காரர் அமைப்புக்கள் ஊடாக விவசாயிகளின் வருமானத்தை அதிகரிப்பதற்காக பழமரக்கன்றுகள் மற்றும் உணவுப் பயிர் கன்றுகள் வழங்கப்படுகின்றன.
”நச்சுத்தன்மையற்ற பயிர்ச்செய்கை – ஆரோக்கியமான சமூகம்” எனும் தொனிப்பொருளில் இரசாயன உர பயன்பாட்டை குறைத்து, இயற்கை உர பயன்பாட்டை அதிகரிப்பதற்காக கமக்காரர் அமைப்புக்களை இயற்கை உர உற்பத்தியில் ஈடுபடுத்தும் செயற்திட்டங்களும் அமுல்படுத்தப்படவுள்ளன.
20 மில்லியன் ரூபா செலவில் 10 கமக்காரர் அமைப்புப் பிரதேசங்களில் பகிர்வு வாய்க்கால்களை நவீனமயப்படுத்தும் வேலைகள் நாளை ஆரம்பமாகின்றன.
அத்துடன், விவசாயிகளுக்கு குடிநீர் வழங்குவதற்காக நீர் விநியோக திட்டங்களை மேம்படுத்துதல், கிரித்தலே நீர்ப்பாசன மாதிரி வள, பயிற்சி நிலையத்தை திறந்து வைத்தல் ஆகிய நிகழ்வுகள் நாளை இடம்பெறவுள்ளன.
நாளைய நிகழ்வுகள் தொடர்பான ஊடக கலந்துரையாடல் கொழும்பு ஜனாதிபதி மாவத்தையிலுள்ள செமா கட்டிடத்தில் தொடர்புடைய அமைச்சுக்களின் உயரதிகாரிகளின் பங்கேற்புடன் நேற்று (11) முற்பகல் நடைபெற்றது.