இலங்கையில் பாராளுமன்றம் ஸ்தாபிக்கப்பட்டு 70 வருடம் பூர்த்தியாகிறது. இதனை முன்னிட்டு இன்று (03) விசேட பாராளுமன்ற அமர்வு இடம்பெறவுள்ளதாக சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
விசேட விருந்தினரை வரவேற்ற பின்னர் விசேட பாராளுமன்ற அமர்வு 2.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அவைத்தலைவர், எதிர்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் உட்பட பல கட்சித் தலைவர்கள் உரையாற்றவுள்ளனர். அவர்களைத் தொடர்ந்து சபாநாயகர் உரை நிகழ்த்தவுள்ளார்.
இந்நிகழ்வின் போது அனைத்து சார்க் நாடுகளின் பாராளுமன்ற சபாநாயகர்கள், பிரதி சபாநாயகர்கள், வெளிநாட்டு பிரதிநிதிகள் உட்பட பல முக்கியஸ்தர்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.
விசேட அமர்வின் நிறைவில் தேநீர் விருந்து நடைபெறவுள்ளதுடன் விருந்தினர் புத்தகத்தில் கையெழுத்திடல், ஞாபகார்த்த முத்திரை வெளியிடுதல் என்பன இடம்பெறவுள்ளது.
கடந்த 70 வருட காலங்களில் நாட்டின் அபிவிருத்திக்காகவும் சமூக மேம்பாட்டுக்காகவும் பல்வேறு சட்டமூலங்கள் பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்டுள்ளது, கல்வி, சுகாதாரம், விவசாயம், போக்குவரத்து, சக்தி வலு உற்பத்தி, வீடமைப்பு, பெருந்தெருக்கள் போன்ற பல்வேறு துறைகள் சார்ந்த சட்டமூலங்கள் இலங்கை பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
எமது நாட்டின் மானுட அபிவிருத்தி நோக்கானது ஏனைய வெளிநாடுகளுடன் ஒப்பிடுகையில் மிகவும் உயர்ந்து காணப்படுகின்றமைக்கு இலங்கை பாராளுமன்றின் பங்களிப்பு அளப்பரியது. இலங்கை பாராளுமன்றத்தின் ஜனநாயகத்திற்கு எழுபது ஆண்டுகள் பூர்த்தியடைந்துள்ள நிலையில் அதன் முன்பாக உள்ள சவால்களை வெற்றிக்கொள்வதற்கு கடுமையாக உழைப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பாராளுமன்றம் ஸ்தாபிக்கப்பட்ட 70 வருடங்கள் பூர்த்தி நிகழ்வை சிறப்பாக கொண்டாட நடவடிக்கை எடுக்கப்படும். நாட்டில் தொடர்ச்சியாக ஜனநாயக ஆட்சியை நடத்திய, மற்றும் மக்கள் வாக்களிப்பினூடாக தெரிவாகும் மிக பழைய பாராளுமன்றம் என்ற சிறப்பை இலங்கை பாராளுமன்றம் பெற்றுக்கொண்டுள்ளது என்று சபாநாயகர் கரு ஜயசூரிய சுட்டிக்காட்டியுள்ளார்..
மேலும், நீண்ட காலத்தின் பின்னர் வலய அரசில் தலைவர்களாக சபாநாயகர்கள் இலங்கைக்கு வருகைத் தருகின்றமை நாட்டுடனான நல்லுறவை காட்டுவதுடன் பெரும் ஆசிர்வாதமுமாகும் என்றும் சபாநாயகர் தெரிவித்துள்ளார்.