புத்தளம் கருவலகஸ்வெவ பிரதேசத்தில் உள்ள பின்தங்கிய கிராமமான நெளும்கம மக்களின் நெற்பயிர்ச்செய்கைகாக நூறு ஏக்கர் வயற்காணியை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இற்றைக்கு எட்டு வருடங்களுக்கு முன்னர் உருவாக்கப்பட்ட நெளும்கம கிராமத்தில் நூறு குடும்பங்கள் வசிக்கின்றன. அக்குடும்பங்களை குறித்த கிராமத்தில் மக்களை குடியமர்த்தப்பட்டபோதிலும் அவர்களுக்குத் தேவையான வசதிகள் செய்துக்கொடுக்கப்படவில்லை. இம்மக்கள் விவசாயிகளாவர். அவர்களுடைய வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக ஒரு குடும்பத்திற்கு ஒரு ஏக்கர் என்றரீதியில் வயற்காணி வழங்கப்படவுள்ளது.
நீர்வசதி மிகவும் குறைந்து காணப்படும் இக்கிராமத்தில் குடி நீர் மற்றும் விவசாய நீருக்கு பெருந்தட்டுப்பாடு நிலவுகிறது. இதனைக் கருத்திற்கொண்டு ஒரு போகத்திற்கு 20,000 ரூபா நிதியுதவி செய்யவும் அரசாங்கம் வழங்கவுள்ளது. எனினும் பண உதவியை விடவும் தமக்கு தண்ணீர் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்து தருமாறு அம்மக்கள் அரசாங்கத்திடம் கோரியுள்ளனர்.
இம்மக்களின் கோரிக்கையை கவனத்திற்கொண்டு விரைவில் தண்ணீர் வசதியை பெற்றுக்கொடுப்பதற்கான திட்டம் தற்போது முன்னனெடுக்கப்பட்டு வருகிறது. மாங்குளம் குளத்தில் உள்ள நீரை பயன்படுத்தி இம்மக்களுக்கு நீர்வசதி வழங்கப்படவுள்ளது. இதனால் மாங்குளம் குளத்தை புனரமைப்பு செய்யவுள்ளதுடன் நெளும்குளம் கிராமத்திற்கு நீர் வசதியை வழங்குவதற்காக தனியான வடிகாலமைப்புத் திட்டம் அமைக்கப்படவுள்ளது. இவ்வபிவிருத்தித் திட்டத்திற்காக அரசாங்கம் 70 இலட்சம் ரூபா நிதியை ஒதுக்கியுள்ளது.
நெளும்கம கிராமத்திற்கான திட்டம் இன்னும் மூன்று மாதங்களில் பூர்த்தி செய்யப்படும் என்றும் அக்கிராமம் ஒரு விவசாய கிராமமாக கட்டியெழுப்பப்படும் என்றும் வடிகாலமைப்பு மற்றும் நீர்வள முகாமைத்துவ இராஜாங்க அமைச்சர் பாலித்த ரங்கே பண்டார தெரிவித்தார்.