மட்டக்களப்பு மாவட்ட செயலகம் மற்றும் மதிப்பீடு தொடர்பான இலங்கை பாராளுமன்ற அமைப்பு ஆகியன இணைந்து ஏற்பாடு செய்த மதிப்பீடு மற்றும் நிலையான அபிவிருத்தி இலக்குகள் தொடர்பான மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுவின் அதிகாரிகளுக்கான செயலமர்வொன்று நேற்று (26)) மட்டக்களப்பு மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
நிலையான அபிவிருத்தியின் இலக்குகளை அடைந்து கொள்ளும் வகையில் இந்தச் செயற்பாடு நாடுபூராகவும் நடைமுறைப்படுத்தப்படுகிறது. இதற்கு மாவட்ட அபிவிருத்திக்குழுக்களின் ஒத்துழைப்பு மிக இன்றியமையாததாகும்.
மதிப்பீடு தொடர்பான திறன்களை வலுப்படுத்தும் வகையில் மதிப்பீடு தொடர்பான இலங்கை பாராளுமன்ற அமைப்பு தெரிவு செய்யப்பட்ட மாவட்டங்களில் இவ்வாறான செயலமர்வுகளை நடத்தி வருகிறது. இதுவரையில் 10 மாவட்டங்களில் இதுபோன்ற செயலமர்வுகள் நிறைவு பெற்றுள்ளது என்பதுடன் மட்டக்களப்பு மாவட்டம் 11ஆவதாக இந்த வாய்ப்பினைப் பெற்றுள்ளது.
இச் செயலமர்வுகள் ஊடாக மதிப்பீடு குறித்து அடிப்படைய அறிவினை பெற்றுக் கொண்டு அதனை மாவட்ட அபிவிருத்தி செயற்பாடுகளினை வலுப்படுத்துவதற்கு பிரயோகிப்பது எதிர்பார்ப்பாகும். நாட்டின் நிலையான அபிவிருத்தி இலக்கினை வலுப்படுத்துவதற்கு இன்றியமையாததாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இச் செயலமர்வில், பாராளுமன்ற உறுப்பினர்களான அலிசாகிர் மௌலானா, எஸ்.யோகேஸ்வரன், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் ஆர்.நெடுஞ்செழியன், மதிப்பீடு தொடர்பான இலங்கை பாராளுமன்ற அமைப்பின் திருமதி இசா வேதசிங்க, வைதேகி அனுசியந்தன், மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுவின் அதிகாரிகளான பிரதேச செயலாளர்கள், திட்டமிடல் பிரிவு அதிகாரிகள், திணைக்களத் தலைவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
LAD_dmu_batti