நாட்டின் அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கும் வகையில் டிஜிட்டல் நூலகங்கள் அமைக்கப்படவுள்ளது.
இலங்கை தகவல் தொழில்நுட்ப நிறுவனம் (ICTA) தேசிய நூலகம், ஆவணங்கள் சேவைகள் சபை மற்றும் கல்வியமைச்சு ஆகிய இணைந்து இந்நூலகங்களை அமைக்கவுள்ளன.
'டிஜிட்டல் இலங்கை' என்ற நோக்கை மேலும் பலப்படுத்தும் வகையில் டிஜிட்டல் நூலகத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.
தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் சமூகத்தின் தேவைக்கேற்ப நூலகங்களில் மாற்றங்களை ஏற்படுத்துவதும் மிக அவசியம் என்று சுட்டிக்காட்டியுள்ள திட்ட முகாமையாளர் ஸ்ரீயந்த ரத்நாயக்க மாகாணசபையின் கீழ் இயங்கும் நூலகத்தை கேந்திரமாக கொண்டு இந்த டிஜிட்டல் நூலகம் இயங்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்திக்கொடுத்தல், தகவல் தொழில்நுட்ப வசதிகளை பயன்படுத்துதல் மற்றும் நூலக முகாமைத்துவத்தை ஊழியர்களுக்கு வழங்குதல் என்பன இதனூடாக செயற்படுத்தப்படும்.
இணையதளமூடாக புத்தகங்களை பயன்படுத்தவதற்கும் தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் அதிக பிரபலமடைந்த, வாசகர்களை கொண்ட சஞ்சிகைகள் மற்றும் பத்திரிகைகளையும் இணையதளமூடாக பார்வையிடுவதற்கான வசதிகள் இதனூடாக ஏற்படுத்திக்கொடுக்கப்படவுள்ளன.
மேலும், அரிய தகவல்கள் அடங்கிய ஆவணங்கள் மற்றும் புத்தகங்களையும் இங்கு வாசிக்கும் வாய்ப்பு வாசகர்களுக்கு கிடைக்கிறது.
டிஜிட்டல் நூலகம் அமைப்பதன் முதற்கட்டமாக கொழும்பு, குருணாகல், பொலன்னறுவை, பதுளை மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் இன்னும் சில மாதங்களில் ஆரம்பிக்கப்படவுள்ளன என்றும் டிஜிட்டல் நூலகத்தை நிர்மாணிப்புப் பணிகளை பார்வையிடுவதற்கான நிறைவேற்றுப் பிரிவொன்று கல்வியமைச்சின் செயலாளர் சுனில் ஹெட்டியாராய்ச்சி தலைமையில் தேசிய நூலகம் மற்றும் ஆவணப்படுத்தல்சபையில் அண்மையில் ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.