அடுத்த ஆண்டு பாடசாலை முதலாம் தவணை ஆரம்பிப்பதற்கு முன் நாட்டில் உள்ள அனைத்து பாடசாலைகளினதும் சுற்றுச்சூழலை பரிசோதனை செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ள சுகாதார, போஷாக்கு மற்றும் சுதேச வைத்தியதுறை அமைச்சு தீர்மானித்துள்ளது.
சுகாதார அமைச்சர் டொக்டர் ராஜித்த சேனாரத்னவின் பணிப்புரைக்கமைய மேற்கொள்ளப்படும் இந்நடவடிக்கையினூடாக டெங்கு பாதிப்பில் இருந்து பிள்ளைகளை பாதுகாப்பதே இதன் நோக்கமாகும்.
அதற்கமைய எதிர்வரும் 27, 28ஆம் திகதிகளில் பாடசாலை வளாகங்களை துப்புறவு செய்ய சுகாதார அமைச்சின் டெங்கு ஒழிப்பு பிரிவு நடவடிக்கை மேற்கொண்டுள்ளதுடன் கல்வியமைச்சும் இதற்கான ஒத்துழைப்பை நல்கியுள்ளது.
கொழும்பு, கம்பஹா, களுத்துறை, காலி மற்றும் கல்முனை ஆகிய மாவட்டங்களில் அமைந்துள்ள பாடசாலைகள் தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்படவுள்ளதாகவும் குறித்த பிரதேசங்களில் அதிக எண்ணிக்கையான டெங்கு நோயாளர்கள் அடையாளங்காணப்பட்டுள்ளனர் என்றும் டெங்கு ஒழிப்பு பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.
மேலும், இந்நடவடிக்கையில், முப்படையினர், பொலிஸார் மற்றும் சுகாதார சேவையாளர்கள் 640 பேரை கொண்ட குழு குறித்த பிரதேசங்களில் பரிசோதனை மற்றும் புகையடித்தல் பணிகளில் ஈடுபடுத்தப்படவுள்ளனர் என்றும் ஏனைய பிரதேசங்களில் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரிகள் ஊடாக பரிசோதனை மற்றும் புகையடித்தல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் சுகாதார அமைச்சின் டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
இதேவேளை, காலி மாவட்டத்தில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளமைக்கு சுற்றுச்சூழலை தூய்மையாக வைத்திருக்காமையே பிரதான காரணம் என்றும் கழிவு முகாமைத்துவத்தில் பாரிய சிக்கல்கள் காணப்படுவதாகவும் சுகாதார அமைச்சு அடையாளங்கண்டுள்ளது. அப்பிரதேசங்களில் பரிசோதனை நடவடிககைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதுன் புகையடித்தலும் மேற்கொள்ளப்படுவதாக அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
குறித்த நடவடிக்கைகளுக்காக சுகாதார அமைச்சரின் பணிப்புரைக்கமைய புதிய 20 புகையடித்தல் கருவிகள் எதிர்வரும் வௌ்ளிக்கிழமை விமானமூலமாக இலங்கைக்கு கொண்டுவரப்படவுள்ளதுடன் மேலும் 105 பிரதான புகையடித்தல் இயந்திரங்கள் எதிர்வரும் ஜனவரி மாதம் கிடைக்கும் என்றும் ஏனையவை கட்டம் கட்டமாக ஜேர்மனியில் இருந்து இலங்கைக்கு கொண்டு வரப்படும் என்றும் சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த ஆண்டின் ஜனவரி தொடக்கம் தற்போது வரை 48, 682 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.