கலாபூஷணம் அரச விருது வழங்கல் விழா 2016 எதிர்வரும் 23ஆம் திகதி காலை 10.00 மணிக்கு கொழும்பு 7 இல் அமைந்துள்ள தாமரை தடாகம் மஹிந்த ராஜபக்ஷ அரங்கில் நடைபெறவுள்ளது.
கலாசார விவகார அமைச்சு 32ஆவது தடவையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இவ்வரச விருது வழங்கல் விழா உள்விவகார, வடமேல் அபிவிருத்தி மற்றும் கலாசார விவகார அமைச்சர் எஸ்.பி. நாவின்ன தலைமையில், பிரதியமைச்சர் பாலித்த தெரவரப்பெருமவின் பங்களிப்பில் நடைபெறவுள்ளது.
இலங்கை கலைத்துறையில் பல்வேறு சாதனைகளை படைத்த 60 வயதுக்கு மேற்பட்ட கலைஞர்களை கௌரவிக்கும் வகையில் வழங்கப்படும் இவ்வரச விருது வழங்கல் விழாவில் சிங்களம், தமிழ், முஸ்லிம் கலைஞர்கள் கௌரவிக்கப்படவுள்ளனர்.
இலங்கையின் அனைத்து மாவட்டங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் 256 சிங்கள கலைஞர்களும், 70 தமிழ் கலைஞர்களும் 25 முஸ்லிம் கலைஞர்களுமாக இம்முறை 351 கலைஞர்கள் கலாபூஷணம் விருது வழங்கி கௌரவிக்கப்படவுள்ளனர்.
சிங்கள கலைஞர்கள் மத்தியில் நடனத்துறையில் சாதனைப்படைத்த 29 கலைஞரகளும் நாட்டியம் மற்றும் நாடகத்துறையில் சாதனைப்படைத்த 41 கலைஞர்களும் சாஹித்ய துறையில் சாதனைப்படைத்த 122 பேரும் ஓவியம் மற்றும் மூர்த்திகலையில் சாதனைப்படைத்த 31 கலைஞர்களும், இசைத்துறையில் சாதனைப்படைத்த 22 கலைஞர்களும் ஏனைய கலைத்துறைகளில் சாதனைப்படைத்த 11 பேருமாக கலாபூஷணம் விருது வழங்கி கௌரவிக்கப்படவுள்ளனர்.
இம்முறை கலாபூஷணம் விருது வழங்கல் விழாவில் 80 வயதுக்கும் மேற்பட்ட 16 பேர் விருது வழங்கி கௌரவிக்கப்படவுள்ளனர்.
கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்த 44 சிங்கள கலைஞர்களும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 31 கலைஞர்களும் விருதுக்காக தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன் ஏனையவர்கள் ஏனைய மாவட்டங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
கலாபூஷணம் விருதுடன் சான்றிதழ் மற்றும் பணப்பரிசில்களையும் வழங்க கலாசார திணைக்களம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. விருது வழங்கலுக்கான கலைஞர்களை தெரிவு செய்யும் பணியில் கலாசார திணைக்களம், இந்து விவகார அமைச்சு மற்றும் முஸ்லிம் விவகார அமைச்சு என்பன ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.