உலகம் மனிதனுக்கு மட்டும் தான் சொந்தமா? அப்படித்தான் மனிதன் நினைத்துக்கொண்டிருக்கிறான். பல மில்லியன் கணக்கான உயிரினங்களின் இருப்பிடமாக உள்ள பூமிப்பந்தை பாதுகாக்க இயற்கைத்தான் எத்தனை வழிமுறைகளை அமைத்துக்கொடுத்திருக்கிறது. அதனை மனிதனின் சுயநலம் கொஞ்சம் கொஞ்சமாக அழித்து வருகிறது என்பதை இன்று ஏற்பட்டு வரும் இயற்கை அனர்த்தங்கள் பறைசாற்றி வருகின்றன.
அவ்வாறான அனர்த்தங்களில் ஒன்றுதான் ஓசோன் படலத்தில் ஏற்பட்டுள்ள ஓட்டை. சூரியனிலிருந்த வெளியேறும் புற ஊதாக்கதிர்களில் இருந்து மனிதன், விலங்கு, தாவரங்கள் என பூமிப்பந்தில் தஞ்சம் புகுந்துள்ள அனைவரையும் பாதுகாப்பதற்காக இயற்கை ஏற்படுத்தியுள்ள படலம்தான் ஓசோன் படலம். எனினும் மனிதனுடைய பேராசை இன்று அப்படலத்தை துளையிட்டுள்ளது. மனிதனின் பேராசையினால் ஏற்பட்ட விளைவை ஏனைய உயிரினங்கள் அனுபவித்து வருகின்றன என்பதே உண்மை.
1970களில்தான் விஞ்ஞானிகள் ஓசோன் படலம் சிதைவடைந்து வருவதை அவதானித்தனர். அன்று அதன் பாதிப்புக்களை எடுத்துரைத்து ஓசோன் படல பாதுகாப்புக்காக குரல் கொடுக்க ஆரம்பித்தனர் விஞ்ஞானிகள். குறிப்பாக போலாந்து விஞ்ஞானியான போல் க்ருட்சன் ஓசோனில் ஏற்பட்ட சிதைவை முதன்முதலில் கண்டறிந்தார். இதனைத் தொடர்ந்து ஓசோன் படலத்தின் முக்கியத்துவத்தை அறிந்து அதனை பாதுகாப்பது தொடர்பில் கவனம் செலுத்த ஆரம்பித்தன உலக நாடுகள். கனடா தலைநகர் 1987ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 16ஆம் திகதி ஓசோன் படலத்தை நாசம் செய்யும் இரசாயனங்களுக்கு எதிரான மான்ட்ரீல் உடன்படிக்கை கையெழுத்திடப்பட்டதையடுத்து அந்த தினமே 1995ஆம் ஆண்டு முதல் சர்வதேச ஓசோன் தினமாக ஐக்கிய நாடுகள் சபையினால் பிரகடனப்படுத்தப்பட்டது.
உலக ஓசோன் பாதுகாப்புத் தினமானது பூமியை பாதிக்கச் செய்யும் முக்கியமான பல்வேறு சுற்றுச்சூழல் பிரச்சினைகள் தொடர்பில் கவனம் செலுத்தும் தினமாகவும் அது தொடர்பில் மக்களுக்கு தெளிவுபடுத்தும் தினமாகவும் அனுஷ்டிக்க உலக நாடுகள் தீர்மானித்தன.
நீண்ட நாட்கள் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளையடுத்துதான் மான்ட்ரீல் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. மிக பிரதானமாக பூமியில் பயன்படுத்தப்படும் பல்வேறு பொருட்களில் இருந்து வெளியேறும் இரசாயன வாயுக்கள் விண்வெளிக்கு சென்று தாக்கமடையச் செய்வதானலேயே ஓசோன் படலத்தில் பாதிப்பு ஏற்படுவதாக அவ்வாய்வுகளில் கண்டறியப்பட்டது. இதனைக் கவனத்திற்கொண்டு ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு தொனிப்பொருளைக் கொண்டு உலக ஓசோன் பாதுகாப்புத் தினம் அனுஷ்டிக்கப்படுவதுடன் அப்படலத்தை பாதுகாப்பதற்காகவும் மீண்டும் உருவாக்குவதற்காகவும் செய்ய வேண்டிய கடமைகள் தொடர்பிலும் நாடுகள் கவனமெடுப்பதுடன் பொது மக்களையும் தெளிவுபடுத்துகின்றன.
2017ஆம் ஆண்டு' சூரியனுக்கு கீழுள்ள அனைத்து உயிர்களையும் பாதுகாப்போம்' என்ற தொனிப்பொருளில் உலக ஓசோன் தினம் அனுஷ்டிக்கப்படுகிறது. இதில் மற்றுமொரு விசேட அம்சம் என்னவெனில் ஓசோன் படலத்தை நாசம் செய்யும் இரசாயனங்களுக்கு எதிரான மான்ட்ரீல் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு இவ்வருடத்துடன் 30 வருடங்கள் பூர்த்தியாகியுள்ள நிலையில், ஐநா பல முக்கிய நிகழ்வுகளை ஏற்பாடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
பூமியிலிருந்து 15 கி.மீ. முதல் 60 கி.மீ உயரம்வரை உள்ள வளிமண்டலப் பகுதி ஸ்டிராட்டோஸ்பியர் எனப்படுகிறது. இந்தப் பகுதியில்தான் ஓசோன் படலம் அமைந்துள்ளது. இந்தப் பகுதியில் உள்ள ஆக்சிஜன் மீது சூரியனின் புறஊதா கதிர்வீச்சு வேதிவினை புரிவதால் ஆக்சிஜன் (O2) அணுக்கள் பிரிக்கப்பட்டு, அந்த அணுக்கள் புதிய ஆக்சிஜனுடன் சேர்ந்து ஓசோன் வாயுவாக (O3) மாறுகின்றன. இது ஒரு படலம் போலப் பூமியைச் சூழ்ந்திருக்கிறது. இந்தப் படலம் இருப்பதால்தான் சூரியஒளி பூமிக்கு நேரடியாக வருவதில்லை.
குளிர்பதனப் பெட்டி (ஃபிரிட்ஜ்), குளிர்சாதனப் பெட்டிகளில் (ஏ/சி) இருந்து வெளியான குளோரோ புளூரோ கார்பன் ஓசோனுடன் வினைபுரிந்து குளோரினாகவும், ஆக்சிஜனாகவும் மாறுகிறது. இதனால் ஓசோன் படலத்தின் அடர்த்தி குறைந்துபோகிறது.
உரங்களில் பயன்படுத்தப்படும் மெத்தில் புரோமைடு, ஜெட் விமானங்கள் வெளியிடும் நைட்ரிக் ஆக்சைடு போன்றவையும் இப்படிப்பட்ட பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன.
மரக்கட்டை, பிளாஸ்டிக் பொருள்களை எரிப்பது, தீயணைப்பு கருவிகள், ஸ்பிரேக்களிலிருந்து வெளி யேறும் குளோரோ புளூரோ கார்பன், டூவீலர்கள், தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கார்பன் டை ஆக்சைடு, நைட்ரஸ் ஆக்சைடு போன்ற வாயுக்களால் காற்று மண்டலம் மாசுபடுவதாலும் ஓசோன் படலம் பாதிக்கப்படுகிறது.
இதன் காரணமாகப் புற்றுநோய், தோல் நோய்கள், பார்வை இழப்பு, பயிர்களுக்குப் பாதிப்பு போன்றவை ஏற்படலாம். உலகில் தோல் புற்றுநோய்க்கு ஆண்டுதோறும் 80 ஆயிரம் பேர் பலியாவது குறிப்பிடத்தக்கது.
தற்போது ஓசோன் படல மெலிவு விரிவடைவது தடுக்கப்பட்டுவிட்டாலும்கூட, ஓசோன் படலத்தில் ஏற்பட்ட பாதிப்பு முழுமையாகச் சீரமைக்கப்படவில்லை.
அதனால், பூமியில் வாழும் மனிதன் உள்ளிட்ட உயிரினங்களுக்கு வளி மண்டலத்திலிருந்து நன்மை செய்யும் ஓசோன் படலத்தின் அடர்த்தி குறையாமல் தடுக்க வேண்டிய பெரும் பொறுப்பு நமக்கு இருக்கிறது என்பதை நாம் ஒவ்வொரும் நினைவில் வைத்துக்கொண்டு செயற்படவேண்டும்.
நன்றி- இணையம்
ஆர்த்தி பாக்கியநாதன்