பூமியில் ஏற்படும் புயலைப் போன்று பல மடங்கு பெரிய புயல் மையம் வியாழன் கிரகத்தில் உள்ளதாகவும் அங்குள்ள மிகப் பெரிய மேக மண்டலமே இதற்குக் காரணம் என்று அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா தெரிவித்துள்ளது.
விண்வெளி ஆராய்ச்சியாளரான கிறிஸ்டோபர் கோவினால் எடுக்கப்பட்ட வியாழன் கிரகத்தின் புகைப்படத்தையும் பூமியின் புகைப்படத்தையும் ஒப்பிட்டு பார்த்ததில் இவ்வுண்மை கண்டறியப்பட்டதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
வியாழன் கிரக புகைப்படத்தில் சிவப்பு நிற புள்ளியொன்று காணப்படுவதாகவும் அந்த சிவப்புப் புள்ளியானது பத்தாயிரம் மைல்கள் பரப்பளவு கொண்ட மேகக் கூட்டம் என்றும் பூமியை விட 1.3 மடங்கு பெரியது என்றும் தெரிய வந்துள்ளது.
இம்மேக மண்டலமானது பூமியில் ஏற்படும் மிகப்பெரிய புயலை விட 10 மடங்கு தூரத்தை கடக்கக் கூடியது என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
ஜூனோ என்ற ஆய்வுத் திட்டத்தினூடாக நாசா வியாழன் கிரக ஆராய்ச்சி செய்து வருகிறது. இதில் 38 ஆராய்ச்சியாளர்களும் 28 முக்கிய பணியாளர்களும் ஈடுபட்டுள்ளனர். வியாழன் கிரகத்திலுள்ள சிவப்புப் புள்ளியானது 1830ம் ஆண்டு முதலாகவே ஆராய்சியாளர்கள் கண்காணித்து வருவதாகவும், அது 350 ஆண்டுகளுக்கும் மேலானதாக இருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளனர். மிகவும் அருகாமையில் துல்லியமான இந்த படங்கள் வியாழன் கிரகம் பற்றிய ஆராய்ச்சியின் முக்கிய மைல்கல்லாக கருதப்படுகிறது.