தாவரங்களுக்கு பயன்படுத்தப்படும் பூச்சிக்கொல்லிகள் காரணமாக தேனீக்கள் அழியும் அபாயம் தோன்றியுள்ளதாக ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.
இரசாயன பூச்சிக்கொல்லிகளில் நியோநிகோடியாய்ட்ஸ் எனப்படும் ஒருவகை பூச்சிக்கொல்லியின் காரணமாகவே தேனீக்கள் அழியும் அபாயம் தோன்றியுள்ளதாக எச்சரித்துள்ள ஆய்வாளர்கள் இப்பூச்சிக்கொல்லியானது பூச்சிக்கொல்லி பயன்படுத்தும் முறையையே மாற்றியுள்ளது என்றும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
பொதுவாக பூச்சிக்கொல்லிகள் பயிர்கள் மீதே தௌிக்கப்படும். எனினும் நியோநிகோடியாய்ட்ஸ் பூச்சிக்கொல்லியானது விதைக்கப்படவுள்ள தானியங்கள் மற்றும் நிலத்தின் மீது வீசப்படுகிறது. இதனூடாக வளரும் போதே பூச்சித் தாக்கமின்றி இப்பயிர்கள் வளர்கின்றன.
ஜெர்மனி, ஹங்கேரி மற்றும் பிரிட்டனில், சுமார் இரண்டாயிரம் ஹெக்டேர் பரப்பளவுள்ள வயல்வெளியில் மேற்கொள்ளப்பட்ட மிகப்பெரிய ஆய்வு, நியோநிகோடினாய்ட்ஸ் தேனீக்களுக்கு தீங்கு செய்வதை உறுதிசெய்துள்ளது.
நியோநிகோடினாய்ட்ஸ் பூச்சிக்கொல்லி மருந்து தேனீக்களை மட்டுமல்லாமல் வண்டுகள் உள்ளிட்ட எல்லா வகையான மகரந்தச்சேர்க்கைக்கான பூச்சிகளையும் மோசமாக பாதிப்பது முதல்முறையாக நிரூபிக்கப்பட்டிருப்பது முக்கிய கண்டுபிடிப்பாக கருதப்படுகிறது.
பிபிஸி
உலகளாவிய மகரந்தச்சேர்க்கையாளர்களான தேனீக்கள் வேகமாக மறைந்துவருவது விஞ்ஞானிகள் மத்தியில் கவலையை தோற்றுவித்துள்ளது. காரணம் உலகின் உணவுத் தாவர மகரந்தச்சேர்க்கையின் பெரும்பகுதி தேனீக்கள் மற்றும் வண்டுகளால் நடக்கிறது. அவை அழிந்தால் பெரும் உணவுத்தட்டுப்பாடு ஏற்படும் என்று ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.