நுகரும் திறனை இழப்பது 'டிமென்ஷியா' எனப்படும் மறதி நோய்க்கான ஆரம்பகட்ட அறிகுறியாக இருக்கலாம் என்று அமெரிக்க விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
சிக்காகோ பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆய்வாளர்கள் 3,000 பேரைக் கொண்டு நீண்டகாலம் நடத்தப்பட்ட ஆய்வில் இவ்விடயம் கண்டறியப்பட்டுள்ளது.
புதினா, மீன், தோடம்பழம், ரோஜா, பதனிடப்பட்ட தோல் ஆகியவற்றின் மணங்களை உணர முடியாதவர்களுக்கு, அவற்றின் மணங்களை உணர முடிந்தவர்களைவிடவும், எதிர்வரும் ஐந்து ஆண்டுகளில் டிமென்ஷியா நோய் வருவதற்கான வாய்ப்பு இரண்டு மடங்கு அதிகம் என்று அந்த ஆய்வின் இறுதியில் கண்டறிந்துள்ளனர்.
மேற்கண்ட பொருட்களில் ஒன்று அல்லது இரண்டின் மணங்களை மட்டுமே நுகர்ந்து உணர முடிந்தவர்களில் 80% பேருக்கு அந்நோய் இருந்ததை அவர்கள் கண்டறிந்தனர்.
மணங்களை நுகரும் உணர்வை இழப்பது என்பது எங்கோ தவறு நிகழ்கிறது என்பதற்கான வலிமையான அறிகுறி என்று அந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டவர்களில் ஒருவரான பேராசிரியர் ஜெயந்த் பின்ட்டூ கூறினார்.