ஜாஎல, தண்டகம ஆகிய பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்ட சட்டவிரோத காணி மீள்நிரப்பு நடவடிக்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தரவின் பேரில் உடனடியாக நிறுத்த மத்திய சுற்றாடல் அதிகாரசபை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
நேற்று முன்தினம் (03) அப்பிரதேசங்களை சேர்ந்த மக்கள் குறித்த விடயம் தொடர்பில் ஜனாதிபதியிடம் முறைப்பாடு செய்துள்ளனர். இதனையடுத்து ஜனாதிபதி குறித்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
உரிய அதிகாரிளுடன் உடனடியாக அவ்விடத்துக்குச் சென்று விசாரணைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி உத்தரவிட்டதையடுத்து மேலதிக நடவடிக்கைகளை மத்திய சுற்றாடல் அதிகாரசபை மேற்கொண்டுள்ளது.
அதற்கமைய, மத்திய சுற்றாடல் அதிகாரசபை அதிகாரிகள், இலங்கை காணி மீட்பு மற்றும் அபிவிருத்திக்கூட்டுத்தாபன அதிகாரிகள் குறித்த ஜாஎல பொலிஸாருடன் குறித்த இடத்திற்கு விஜயம் செய்து விசாரணை நடவடிக்கைகளை ஆரம்பித்துடன் சட்டவிரோத காணி நிரப்பு நடவடிக்கையும் நிறுத்தப்பட்டது.
முதுராஜவெல, கடோலான சுற்றாடல் தொகுதிக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் பாரிய நிலப்பரப்பொன்றை சட்டவிரோதமாக மீள்நிரப்பியவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
சுற்றாடலுக்கு பல்லுயிரத்தன்மைக்கு சேதமேற்படுத்தும் வகையில் இக்காணி மீள்நிரப்பு செயற்பாட்டுக்கு சட்டத்திற்கமைவாக ஆகக்கூடிய தண்டனை வழங்குமாறு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.