பிறந்துள்ள புதுவருடம் இந்நாட்டு விவசாயத்துறையில் புரட்சிகரமான மாற்றத்தை ஏற்படுத்தும் வருடமாக இருக்கும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார்.
பொலன்னறுவை மாவட்ட விவசாய சங்கங்களின் தலைவர்களுடன் நேற்று (01) நடைபெற்ற கலந்துரையாடலில் ஜனாதிபதி இவ்வாறு கூறியுள்ளார்.
இன்று ஆரம்பமாகும் ‘பேண்தகு யுகத்தின் மூன்றாண்டுப் பிரவேசம்’ தேசிய நிகழ்ச்சித்திட்டத்துடன் இந்நாட்டின் விவசாயத் துறையில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தவுள்ளதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி, அந்நிகழ்ச்சித்திட்டங்களை வெற்றிபெறச் செய்வதற்கு அனைத்து விவசாய சமூகத்தினதும் ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டார்.
மாவட்டத்தின் விவசாய சமூகம் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து இதன்போது ஜனாதிபதிக்கு விளக்கமளிக்கப்பட்டதுடன், எதிர்கால அபிவிருத்தித் திட்டங்களுடன் அந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வுகளைப் பெற்றுக்கொடுப்பது அரசாங்கத்தின் நோக்கமாகும் என்றும் விவசாயக் குடும்பத்தில் பிறந்த தான் இந்நாட்டின் எந்தவொரு விவசாயக் குடும்பத்தையும் பட்டினியில் இருக்க இடமளிக்கப் போவதில்லை என்றும் தெரிவித்தார்.
பூகோல வெப்பமாதலுடன் ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றத்தின் காரணமாக விவசாய நேரசூசியில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்களினால் நாடளாவிய ரீதியில் விவசாய சமூகம் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது.