மருந்துகளின் விலைக் கட்டுப்பாட்டையடுத்து அறுவை சிகிச்சைகளுக்கான உபகரணங்களின் விலைகளை குறைப்பதற்கு சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.
இதன்படி முதற்கட்டமாக கண் அறுவை சிகிச்சைக்காகப் பயன்படுத்தப்படும் கண் வில்லைகளின் விலைகளில் குறைப்பு செய்வது குறித்து ஆராயப்பட்டு வருவதாகவும் அமைச்சர் கூறினார்.
கண் வில்லைகளின் விலைகளில் ஏற்பட்டுள்ள அதிகரிப்புத் தொடர்பில் பெரும் அசெளகரியங்களை எதிர்நோக்குவதாக பொதுமக்கள் சுகாதார அமைச்சில் முறைப்பாடு செய்துள்ளனர்.
அரசாங்க ஆஸ்பத்திரிகளில் செய்யப்படும் கண் அறுவை சிகிச்சையின்போது சுகாதார அமைச்சின் பணிப்புரைக்கமைய இலவசமாகவே கண் வில்லைகள் வழங்கப்படுகின்றன. இதற்கென ஒரு இலட்சம் கண் வில்லைகளை இலவசமாக வழங்க சுகாதார அமைச்சர் நடவடிக்கை எடுத்துள்ளார். என்றபோதும் தனியார் வைத்தியசாலைகளுக்கு வரும் நோயாளிகள் கண் வில்லைகளைப் பெற்றுக்கொள்ள அதிக விலை கொடுக்க வேண்டியுள்ளது.
இந்தியாவிலிருந்து சுமார் 6 ஆயிரம் ரூபாவுக்கு இறக்குமதி செய்யப்படும் கண் வில்லை, நோயாளர்களுக்கு 25 ஆயிரம் ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகின்றது. கண் வில்லைகளின் விலைகளை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதன்மூலம் சுமார் 10 ஆயிரம் ரூபாவுக்குள் கண் வில்லைகளை சந்தையில் வாங்கக்கூடியதாக இருக்கும் என்றும் அமைச்சர் நம்பிக்கையளித்தார்.
இது தொடர்பில் அறுவை சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படும் உபகரணங்களின் விலைகளை குறைப்பதற்கான ஒரு திட்டத்தை தயாரிக்குமாறு அமைச்சர் தேசிய ஔடத கட்டுப்பாட்டு அதிகார சபைக்கு பணிப்புரை வழங்கியுள்ளார்.