கடந்த கால யுத்தத்தினால் பாதிப்புக்குள்ளான பாதுகாப்பு படையினர் மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களின் சேவை நலனுக்காக நிதி உதவி வழங்கும் திட்டத்தினூடாக ரணவிரு சேவை அதிகார சபையின் கீழ் நாடளாவிய ரீதியில் நலன்புரி உதவி திட்ட மையங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பணிப்புரைக்கு அமைவாக பாதுகாப்பு அமைச்சின் ஏற்பாட்டில் இந்நலன்புரி உதவி திட்ட மையங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இதற்கமைவாக மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த கால யுதத்தத்தின் போது அங்கவீனமுற்ற , இறந்து போன படை வீரர்கள் மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களின் சேவை நலனுக்காக குடும்ப உறவுகளின் உறுப்பினர்களுக்கு ரணவிரு சேவை அதிகார சபையின் நலன்புரி திட்டங்கள் தொடர்பான தெளிவுபடுத்தும் முதல் கட்ட மாவட்ட ரணவிரு ஒன்றியத்தின் ஒன்று கூடல் நிகழ்வு நேற்று (29) வியாழக்கிழமை மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக டேர்பா மண்டபத்தில் நடைபெற்றது .
இந்நிகழ்வில் ரணவிரு சேவை அதிகார சபை தலைவி அனோமா பொன்சேக்கா பிரதம அதிதியாக கலந்துகொண்டு ரணவிரு சேவை அதிகார சபையின் புதிய திட்டத்திற்கு அமைவாக ரணவிரு ஒன்றியத்தினால் முன்னெடுக்கப்படவுள்ள எதிர்கால செயல்திட்டங்களில் வாழ்வாதாரம், தொழில் வாய்ப்பு அவர்களின் பிள்ளைகளின் கல்வி நடவடிக்கைகள் தொடர்பாக படை வீரர்கள் மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களின் பாதிக்கப்பட்ட குடும்ப அங்கத்தவர்களுடன் கலந்துரையாடினார்.
இதன்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த கால யுதத்தத்தின் போது அங்கவீனமுற்ற மற்றும் இறந்து போன படை வீரர்கள், பொலிஸ் உத்தியோகத்தர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு ரணவிரு ஒன்றியத்தின் அங்கத்துவ அடையாள அட்டைகளும் வழங்கப்பட்டன.
கடந்த 30 வருடகால யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்காக முப்படையினர் மற்றும் பொலிசார் உயிர் மற்றும் உடல் அவயவங்களை இழந்து நாட்டை மீட்டுள்ளனர், உயிரிழந்த யுத்த வீரர்களின் மனைவி மற்றும் உறவினர்களின் பிரச்சினைகளை தீர்த்து வைப்பதில் நாம் பெருமையடைகின்றோம் என ரணவிரு சேவை அதிகார சபையின் தலைவி அனோமா பொன்சேகா தெரிவித்தார்.
இந்நிகழ்வில் உயிர் நீத்த வீரர்களின் உறவினர்களின் பிரச்சினைகளை கேட்டறிந்து கொண்டதுடன் அவர்களுக்கு பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்த்தனவின் வழிகாட்டலின் கீழ் உருவான யுத்த வீரர்களுக்கான விருசர அடையாள அட்டையும் வழங்கிய அனோமா பொன்சேக்கா, மேலும் கூறுகையில் ஒரு யுத்த வீரரின் மனைவி என்ற வகையில் வீரர்களுக்குள்ள பிரச்சினைகளை நான் அறிவேன், அதற்காகத்தான் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள 14 பிரதேச செயலாளர் பிரிவுகளிலுமுள்ள வீரர்களின் உறவினர்களை ஒன்றிணைத்து ஒன்றிமாக்கி பிரச்சினைகளை ஈடு செய்வதற்காக 2016 ஆம் ஆண்டு முதல் கிழக்கு மாகாணத்தில் மாவட்ட மற்றும் மாகாண மட்டத்தில் அதிகாரிகளை நியமித்து உங்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான உந்து சக்தியாக நாம் உள்ளோம்.
எம்மால் நியமிக்கப்பட்டள்ள அதிகாரிகளுக்கு படையினர் மற்றும் பொலிசார் ஒத்துழைப்பு வழங்கி வருகின்றனர். குறித்த வீரர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சின் ஊடாக நாம் செய்பட்டு வருகின்றோம் என்றார்.
இந்நிகழ்வில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சின் செயலாளர் ஏ.வி.ஜீ. கித்சிறி, மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.கிரிதரன், கிழக்கு மாகாண இராணுவக் கட்டளை அதிகாரி டி.வி.எம்.கே. ஹெட்டியாராச்சி, மட்டக்களப்பு விமானப் படையின் அதிகாரி வி.ஜி. புத்திக்க பியசிறி, மட்டக்களப்பு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் டினேஸ் கருணாநாயக்க மற்றும் மட்டக்களப்பு பொலிஸ் அத்தியட்சகர் கே.வி. கீர்த்தி ரட்ண ஆகியோர் கலந்து கொண்டனர்.
LDA_dmu_batti