கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீடு நடத்தப்படவுள்ள 68 பாடசாலைகள் எதிர்வரும் ஜனவரி 16ம் திகதி முதலாம் தவணைக்காக ஆரம்பிக்கப்படும் என்று பரீட்சைகள் திணைக்களம் வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
150 இலட்சம் வரையான விடைத்தாள்கள் திருத்துவதற்காக இம்முறை கிடைத்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ள பரீட்சைகள் திணைக்களம், மதிப்பீட்டு நடவடிக்கைகள் இரு கட்டங்களாக நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளது.
முதற்கட்டப் பணிகளில் ஜனவரி 2ஆம் திகதி தொடக்கம் 12ஆம் திகதி வரையும் இரண்டாம் கட்ட மதிப்பீட்டுப் பணிகள் 21ம் திகதி தொடக்கம் 30ம் திகதி வரையும் நடைபெறவுள்ளதோடு மதிப்பீட்டுப் பணிகளுக்காக, 87 பாடசாலைகள் பயன்படுத்தப்படவுள்ளன.
அப்பாடசாலைகளில் 68 பாடசாலைகள் முழுமையாக மதிப்பீட்டுப் பணிகளுக்காக பயன்படுத்தப்படவுள்ளதுடன் அவை முதலாம் தவணைக்காக எதிர்வரும் 16ஆம் திகதி ஆரம்பிக்கப்படும். ஏனைய 19 பாடசாலைகளும் பகுதியளவில் மட்டுமே மதிப்பீட்டுப் பணிகளுக்காக பயன்படுத்தப்படுவதனால் அப்பாடசாலைகளில் எதிர்வரும் ஜனவரி 2ஆம் திகதி கற்றல் நடவடிக்கைகளுக்காக ஆரம்பிக்கப்படும்.
மதிப்பீட்டுப் பணிகளுக்காக , ஹட்டன் புனித ஜோன் பொஸ்கோ கல்லூரி, ஹட்டன் ஹைலண்ட் கல்லூரி, திருகோணமலை ஒரிசில் விவேகானந்தா வித்தியாலயம், மட்டக்களப்பு புனித மைக்கல்ஸ் கல்லூரி, மட்டக்களப்பு வின்சன் மகளிர் உயர்தரப் பாடசாலை, வவுனியா தமிழ் மகா வித்தியாலயம், கிளிநொச்சி மகா வித்தியாலயம், யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி, யாழ்ப்பாணம் இந்துப் பெண்கள் பாடசாலை மற்றும் நெல்லியடி மத்திய மகா வித்தியாலயம் உள்ளிட்ட 68 பாடசாலைகள் முழுமையாக பயன்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.