மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ள இடர் மதிப்பீடு மற்றும் வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகள் வடிவமைப்பு தொடர்பாக பிரதேச செயலாளர்கள், திணைக்களத்தலைவர்களுக்கான ஒருநாள் செயலமர்வு நேற்று (19) மட்டக்களப்பு மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இச் செயலமர்வில் பிரதான வளவாளராக நீரியலாளரும் றோயல் காஸ்கோனிங் நிறுவனத்தின் திட்ட முகாமையாளருமான அலெஸ் கூஜெர் கலந்து கொண்டார்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் வெள்ளம் மற்றும் சாதகமாக தீர்வுகள் குறித்து நீர்ப்பாசனத்திணைக்களத்தின் நீர்முகாமைத்துவ மற்றும் பயிற்சிப்பிரிவின் பணிப்பாளர் பொறியியலாளர் எம்.மோகன்ராஜ், முந்தனையாற்றுத்திட்டம் தொடர்பில் மட்டக்களப்பு மாவட்ட நீர்ப்பாசனத்திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட பணிப்பாளர் பொறியியலாளர் ஏ.எல்.ஜவ்பர் ஆகியோர் விளக்கமளித்தனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் கித்துள் - உறுகாமம் குளங்களை இணைக்கின்ற வகையில் முந்தனை ஆறு அபிவிருத்தித்திட்டத்தின் கீழ் 24140.6 மில்லியன் செலவில் மேற்கொள்ளப்படவுள்ள ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கித்துள் உறுகாமம் குளங்களை இணைக்கும் திட்டத்துக்கான ஆரம்ப நடவடிக்கைகள் தற்போது ஆரம்பமாகியுள்ளன. இதன் ஒருகட்டமாகவே இந்தச்செயலமர்வு நடைபெற்றது.
உலக வங்கியின் நிதியில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள கித்துள் - உறுகாமம் குளங்களை இணைக்கின்ற வேலைத்திட்டத்தின் சுற்றாடல் தாக்க மதிப்பீடு, தயாரிப்பதற்கான வேலைகள் நடைபெற்று வருகின்றன. அதே போன்று சமூக பொருளாதார ஆய்வினை மத்திய நீர்ப்பாசனத்திணைக்களமும் ஏறாவூர் பற்று பிரதேச செயலகமும் இணைந்து நடைமுறைப்படுத்தவுள்ளன. சாத்திய வள அறிக்கைக்குரிய ஆய்வுகளை பிரென்சு நிதியீட்டமுகவர் நிறுவனம் மேற்கொண்டுள்ளது.
இத் திட்டம் மூலம் இப் பகுதியில் ஏற்படும் வெள்ளப் பாதிப்புக்களைக் குறைத்துக் கொள்ளலாம். அத்துடன் வரட்சி காலத்தில் நீர்விநியோகத்தினையும் மேற்கொள்ள முடியும் என்பது முக்கியமாகும்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் 2ஆவது பெரிய குளமாக இவ் கித்துள் - உறுகாமம் குளம் அமையவுள்ளது. அத்துடன், நெல் உற்பத்திக்கான சீரான நீர் விநியோகம் கிடைக்கும், உப உணவு உற்பத்தி அதிகரிக்கும், என்பதுடன் வெள்ளம், வரட்சியைக் குறைப்பதில் முக்கிய பங்காற்றும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தலைமையில் நடைபெற்ற முந்தனையாற்று அப்விருத்தித்திட்டத்தின் ஊடாக வெள்ளத்தடுப்பை மேற்கொள்ளல் தொடர்பான இச் செயலமர்வில், பிரதேச செயலாளர்கள், திணைக்களத்தலைவர்கள் மற்றும் அனர்த்தத்துடன் தொடர்புடைய பிரிவுகளின் தலைவர்களும் கலந்து கொண்டனர்.
LDA_dmu_batti