டெங்கு பரவும் வகையில் சூழலை வைத்திருப்போர் தொடர்பில் முறைப்பாடு செய்வதற்கு மேல் மாகாணத்தை மையப்படுத்தி மூன்று மத்திய நிலையங்கள் அமைக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
24 மணிநேரம் இயங்கும் வகையில் நிறுவப்படவுள்ள இம்மத்திய நிலையங்களில் பொலிஸார் மற்றும் சுகாதார சேவையாளர்கள் உள்ளடக்கப்படுவர். நாட்டில் டெங்கு அபாயத்தை குறைக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ள பல்வேறு திட்டங்களில் ஒன்றாக இம்மத்திய நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன என்று சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
டெங்கு பரவும் அபாயம் மேல் மாகாணத்திலேயே அதிகமாக காணப்படுகிறது. எனவே அதனைத் தடுக்கும் வகையில் குறித்த மத்திய நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன. இதற்காக மேலதிகாக 500 சுகாதாரப் பணியாளர்கள் நியமிக்கப்படவுள்ளனர்.
மேலும், நுளம்பு பரவுவதை தடுக்க புகையை பிரயோகிப்பதற்கான இயந்திரங்களும் கொள்வனவு செய்யப்படவுள்ளன. கொழும்பு உட்பட 10 மாவட்டங்களில் டெங்கு நோய் பரவும் அபாயம் காணப்படுகிறது.
இந்த ஆண்டின் கடந்த 11 மாதங்களில் 48 ஆயிரத்து 682 பேர் டெங்கு தொற்றுக்குள்ளாகியிருப்பதுடன் இதுவரை 77 பேர் உயிரிழந்துள்ளனர். டிசம்பர் மற்றும் ஜனவரி மாதத்தில் மழை அதிகரிக்குமாயின் டெங்கு பரவும் அபாயம் அதிகரிக்கும் என்று அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.