நாட்டில் வீடில்லாதவர்களுக்கு அரச வங்கிகளினூடாக விசேட வீடமைப்புக் கடன்களை வழங்குவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டு வருவதாக பொது நிறுவன அபிவிருத்திபிரதியமைச்சர் எரான் விக்கிரமரட்ன தெரிவித்துள்ளார்.
ஐதேக தலைமையகமான சிறிகோத்தவில் நேற்று (15) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே பிரதியமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், அரசின் 50,000 வீட்டுத் திட்டத்தின் கீழ் 40,000 வீடுகளை நிர்மாணிப்பதற்கு வீடமைப்புக் கடன்களை அடுத்த வருடம் வழங்க நாம் தீர்மானித்துள்ளோம்.
மேலும் அரச வர்த்தக நிறுவனங்களில் அரசியல் மயமாவதைத் தடுப்பதற்கான பொது நிறவன சட்டமூலம் அடுத்த வருடம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. குறித்த உத்தேச சட்டத்தின் கீழ் வர்த்த நிறுவனங்களுக்கு பொறுத்தமான பணிப்பாளர்களை நியமிக்கும் பொறுப்புடன் கூடிய பணிப்பாளர் சபையொன்று நிறுவப்படும்.
நாட்டிலுள்ள 250 அரச நிறுவனங்களில் 60 நிறுவனங்களில் அரசியல் தலையீட்டினால் ஏற்பட்டுள்ள நட்டமானது 600 மில்லியனுக்கும் அதிகம் என்று கணிப்பிடப்பட்டுள்ளது.
அம்பாந்தோட்டை துறைமுகம் அம்பாந்தோட்டை மக்களுக்கோ, அல்லது இதனை முன்மொழிந்த அரசியல்வாதிகளுக்கோ சொந்தமானது அல்ல. அந்நிறுவனம் பொது மக்களின் வரிப்பணத்தில் இயங்கும் தேசிய சொத்து என்று அவர் மேலும் தெரிவித்தார்.