பிறக்கும் 2017ஆம் ஆண்டு மார்ச் மாதமளவில் உள்ளூராட்சித் தேர்தலை நடத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரகட்சி தலைமையகத்தில் நேற்று (15) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அமைச்சர் இதனை தெரிவித்தார்.
எல்லை நிர்ண மேன்முறையீட்டுக் குழுவின் அறிக்கை எதிர்வரும் 27 ஆம் திகதி கிடைக்கும் என்றும் அதன்பின்னர் அதனை வர்த்தமானியில் வெளியிட தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் தாமதமாகாமல் நடத்தப்படுவது மேன்முறையீட்டு குழுவிடமே தங்கியுள்ளது. அக்குழுவின் அறிக்கை தாமதமானால் தேர்தலும் தாமதமாகும்.
4000 எல்லைகளில் 2 ஆயிரம் தொடர்பில் திருத்தங்கள் செய்ய வேண்டியிருந்தது. சகல கட்சிகளினதும் வேண்டுகோளுக்கிணங்க எல்லை நிர்ணயம் தொடர்பில் மேற்முறையீடுகள் பெறப்பட்டு அதனை ஆராய குழு அமைத்தோம்.
அக்குழுவானது சுயாதீனமாக செயற்பட்டு வருகிறது. எதிர்வரும் டிசம்பர் 31 திகதி வரை அறிக்கை சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு வழங்கியுள்ளேன். இதற்கு மேல் கால அவகாசம் வழங்கப்போவதில்லை. எதிர்வரும் 24 ஆம் திகதி எனக்கு அறிக்கையை கையளிப்பதாக குழு அறிவித்துள்ளது.
மொழிபெயர்ப்பு பணிகள் தற்பொழுது முன்னெடுக்கப்படுகிறது. நாளை அதை தந்தால் மறுதினமே அதனை வர்த்தமானியில் வெளியிட தயாராக உள்ளேன் என்று அமைச்சர் மேலும் தெரிவித்தார்.